Wednesday, December 9, 2009

இந்திய அணி - சில நாள் முதல்வன்


இந்தியக் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் முன்னெப்போதும் இல்லாத நிலையை அடைந்திருக்கின்றது. நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 -0 என்று வென்றதால் ICC டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அது போல் நூறு டெஸ்ட் வெற்றிகளையும் பெற்றுள்ளது. இப்போதுள்ள இந்திய அணி வீரர்களைப் பார்க்கும்போது இந்த வெற்றி எளிது போல் தோன்றலாம்.இந்த வெற்றி அதிகம் கொண்டாடப்படுவதற்குக் காரணம் இது எளிதில் பெற்றதல்ல.இந்த அணி உருவாக, பத்தாண்டு காலம் பிடித்துள்ளது. கங்குலி தலைமையில் தூவப்பட்ட விதை இன்று தோனியின் பார்வையில் முளைத்துள்ளது.கடந்த பத்தாண்டுகளில் இந்திய அணி நியூ சிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் போன்ற நாடுகளில் விளையாடி டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.
வேற எந்த காலக்கட்டத்திலும் இந்திய அணி இப்படி வெற்றி பெறவில்லை.

90 களின் இறுதி வரை இந்திய அணி உள்ளூரில் மட்டுமே பலவான் என்ற நிலை இருந்தது.
அத்திபூத்தாற்போல் வெளிநாடுகளில் ஓரிரு வெற்றிகள் மட்டுமே கிடைத்தன. இந்திய அணி பெற்ற 100 டெஸ்ட் வெற்றிகளில் 41 வெற்றி கடந்த பத்தாண்டுகளில் வந்துள்ளது. அதுபோல் வெளிநாடுகளில் இந்திய அணி அடைந்துள்ள 25 டெஸ்ட் வெற்றிகளில் (ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் அணிகளிடம் பெற்ற வெற்றி நீங்கலாக) 13 வெற்றி கடந்த பத்தாண்டுகளில் வந்துள்ளது.

1999 ல் சூதாட்ட புகாரில் சிக்கி அணி கேப்டன் அசாருதீன் வெளியேற்றப்பட்ட நேரத்தில் சச்சின் தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சுருண்டது. அந்த நேரத்தில் சச்சினும் தலைமைப்பொறுப்பிலிருந்து விலக, கேப்டன் பதவி கங்குலியைத் தேடி வந்தது. கங்குலி செய்த முதல் காரியம் அணியின் மூத்த வீரர்கள் சிலரை வெளியேற்றி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். இதன் பலனாக மினி உலகக்கோப்பை இறுதி வரை இந்திய அணி சென்றது. பின்னர் இந்தியாவிற்கு பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. (உபயம்: லக்ஷ்மண் மற்றும் ஹர்பஜன்). இதுதான் இந்திய அணியின் வெற்றிப்பயணத்தின் முதல் படி எனலாம். ஏனெனில் ஆஸ்திரேலியா அணி அபோது தான் தொடர்ந்து பல டெஸ்ட் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருந்த நேரம். யாராலும் வெல்ல முடியாத அணி என்ற அதன் நிலை சற்றே ஆட்டம் கண்டது.

பின்னர் இங்கிலாந்து சென்ற இந்திய அணி 1 - 1 என்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இந்தத் தொடரின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தான் சேவாக் முதன்முதலில் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அணிக்கு சிறந்த அதிரடியான துவக்க வீரர் கிடைத்தார். அதன்பின் ஸ்டீவ் வாவின் கடைசி டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியா சென்ற கங்குலி தலைமையிலான அணி 1 - 1 என்று சமன் செய்தது. பின்னர் பாகிஸ்தான் நாட்டில் அவர்களுக்கு ஏதிரான டெஸ்ட் வெற்றி என்று இந்தியா, நன்கு முன்னேறியது.

அணியின் புதிய பயிற்சியாளர் சேப்பலுடன் மோதி கங்குலி வெளியேறிய பின்னர் டிராவிட் கேப்டன் பொறுப்பேற்றார்.பின்னர் வெஸ்ட்இண்டீஸ் சென்ற இந்திய அணி அங்கு நடந்த டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. பின்னர் தென் ஆப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் வெற்றி , இலங்கை அணியிடம் டெஸ்ட் தொடர் வெற்றி என்று நன்கு முன்னேறிய இந்தியா பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. உலகக்கோப்பையில் மோசமான தோல்விக்குப் பின் டிராவிட் வெளியேற கும்ப்ளே கேப்டன் பொறுப்பேற்றார். அவரின் தலைமையில் பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடரை வென்றது. பின்பு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நடுவர்களின் மோசமான தீர்ப்புகளால் தொடரை 2 - 1 என்று இழந்தது. இந்த கால கட்டத்தில் தான் சேவாக் மற்றும் காம்பிர் இருவரும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக அறியப்பட்டனர். இந்திய அணியின் நீண்டநாள் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது.

பின்னர் தோனி தலைமையில் தென் ஆப்பிரிக்காவுடன் 1 - 1 என்று சமன் செய்தது. இங்கு வந்த ஆஸ்திரேலியா அணியை 2 - 0 என்று தோற்கடித்தது, பின்பு நியூசிலாந்து சென்ற இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை வென்றது. இதுவரை தலைமையேற்று விளையாடிய டெஸ்ட் போட்டி ஒன்றிலும் தோற்காமல் வெற்றிக்கேப்டனாக வலம் வருகிறர் தோனி.

இந்த முதலிடம் நிரந்தரம் என்று நாம் அணியினரும் சரி, நாமும் சரி, நினைக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா நம்மை முந்தும் நிலையிலுள்ளது.மேலும் அடுத்த ஒரு வருடம் இந்தியா, வங்காளதேசத்தை மட்டுமே எதிர்த்து டெஸ்ட் விளையாடவுள்ள நிலையில், தரவரிசையில் நம் அணியின் சரிவும் தவிர்க்க முடியாதது எனத்தெரிகின்றது. இந்த நிலையில் இந்திய அணியை மேம்படுத்த தோனி என்னவெல்லாம் செய்யவேண்டும்?

இந்தப்பத்தாண்டு காலம் டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணியின் பலம், பேட்டிங் மட்டுமே. பௌலிங்கில் கும்ப்ளே, ஹர்பஜன் நீங்களாக ஒருவரும் ஜொலிக்கவில்லை. ஆக இந்தியாவின் பலம், சுழற்ப்பந்து மட்டுமே. ஏனெனில் இந்திய சுழற்ப்பந்து வீரர்கள் வெளிநாடுகளின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களிலும் நமக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றனர். சற்று கிரிக்கெட் வரலாற்றைப் புரட்டினால், இந்திய அணி வெற்றி பெற்ற இந்த காலக்கட்டத்தில், வேகப்பந்து வீச்சில் ஒவ்வொரு அணியிலும் சிறந்த இரு வீரர்கள் இருப்பர்.

உதாரணம்:
தென் ஆப்பிரிக்கா - டோனல்ட் - பொல்லாக்
வெஸ்ட் இண்டீஸ் - வால்ஷ் - அம்ப்ரோஸ்
பாகிஸ்தான் - வாசிம் அகரம் - வாகார் யூனிஸ்
ஆஸ்திரேலியா - மெக்ராத் - ப்ரெட் லீ

ஆனால் இந்திய அணியில் ஸ்ரீநாத் சென்ற பின்னர் அந்த இடம் இன்னும் நிரப்பப்படாமலேயே உள்ளது. நாமும் நிறைய பரிசோதனைகள் செய்து பார்த்தும் சிறந்த இரு வீரர்கள் இன்னும் கிடைக்கவில்லை. வரும் ஓரிரு வீரர்களும் சில காலம் மட்டுமே சோபிக்கின்றனர். பின் காயம் மற்றும் உடல் தகுதியின்மை காரணமாக சில காலம் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் சுழற்ப்பந்து வீரர்கள் மற்றும் பேட்டிங் இரண்டை மட்டுமே நம்பி இவ்வளவு வெற்றிகள் பெறுவது சுலபமில்லை.வேகப்பந்து வீச்சாளர் பாற்றக்குறையைப் போக்குவது இவரின் முதல் கடமையாகும்.

இனி இந்திய அணி ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் விளையாடி, வென்று நீருபிக்கும் போது மட்டுமே அது முதலிடம் பிடிக்கவல்ல அணியென்று நினைக்கமுடியும்.

மேலும் சச்சின், டிராவிட், லக்ஷ்மண் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் ஓய்வு பெறப்போகும் நிலையில் அந்த இடங்களை சரியாக நிரப்பும் இளம்வீரர்களைத் தேர்வு செய்து இப்பொது முதல் பயிற்சி அளிப்பது காட்டாயமாகின்றது. இவை அனைத்தும் நிறைவேற்றும் பட்சத்தில் தான் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பான இடம் பெரும். ஆனால் அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Wednesday, November 25, 2009

காளமேகப்புலவரின் மறுமொழி..........


இரண்டு மாதங்களாக பதிவுகள் ஏதும் வெளியிடாமல் இருந்ததற்கு பயணிகளிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம்.

காளமேகப்புலவர் குடந்தையில் ஒரு வைணவ குலத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் வரதன். திருவானைக்கா கோவில் மோகனாங்கியின் மீது கொண்ட காதலால் சைவ குலத்திற்கு மாறி அவளையே மணந்து திருவானைக்கா கோவிலில் இருவரும் திருப்பணி செய்து வந்தனர்.

இவ்வாறு வைணவ குலத்திலிருந்து சைவ குலத்துக்கு மாறிய நம் புலவரிடம் திருவரங்கத்தில் வசிக்கும் வைணவர் ஒருவர், திருமால் உலகத்தை உண்டபொழுது உங்கள் சிவபெருமான் அந்த உலகத்தில் எங்கே இருந்தார் என்று நக்கலாக ஒரு வினாவை வினவினார். அந்த வினாவிற்கு காளமேகப் புலவர் ஒரு பாடலின் மூலம் பதில் உரைத்தார். அந்தப் பாடலையே நாம் இன்று பயணிகளுக்காக பதிவாக வெளியிடுகின்றோம்.

பாடல்:

அருந்தினான் அண்டம்எலாம் அன்றுமால் ஈசன்
இருந்தபடி ஏதுஎன்று இயம்பப் - பொருந்திப்
பருங்கவளம் யானைகொளப் பாகன்அதன் மீதே
இருந்தபடி ஈசன்இருந் தான்.


விளக்கம்:

உலகத்தை (அண்டம்) திருமால் உண்ட பொழுது சிவன் அந்த உலகத்தில் இருந்த இடத்தைப் கூறு என்று கேட்டால், யானை சோற்று உருண்டையை உண்ணும் பொழுது யானையின் பாகன் அதன் மீது ஏறி அமர்ந்திருந்தது போல் சிவன் திருமாலின் மீது அமர்ந்திருந்தார். என நக்கலாக வினா எழுப்பிய திருவரங்கத்து வைணவனுக்கு நக்கலாகவே பாடல் மூலம் பதில் அளித்தார்.

இவ்வாறெல்லாம் யோசிக்கும் சக்தியை காளமேகப்புலவருக்கு மட்டும் கடவுள் கொடுத்தாரோ என்னவோ! அதே போல் நினைத்த இடத்தில் கூறவேண்டிய அனைத்தையும் எதுகை மோனையுடன் வெண்பாவில் அமைப்பது நம் காளமேகப் புலவருக்கு கைவந்த கலையாகவே இருந்திருக்கின்றது.

இதே போல் இன்னுமொரு பாடலுடன் உங்களை சந்திக்கின்றோம். பாடல் பிடித்திருந்தால் பயணிகள் பின்னூட்டம் இட மறக்கவேண்டாம்.

Saturday, September 26, 2009

காளமேகப் புலவரின் கடைமொழி மாற்றுப் பாடல்........

பயணிகளுக்கு விஜயதசமி வாழ்த்துக்கள்!

சென்ற வாரம் எங்களுடைய வலை இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் எங்களால் பயணிகளுக்கு எந்தப் பதிவையும் வெளியிட இயலவில்லை. அதற்க்காகப் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்து இந்தவாரப் பதிவை உங்களுக்காக வெளியிடுகின்றோம்.

இந்தப் பதிவில் பயணிகளுக்காக காளமேகப் புலவரின் கடைமொழி மாற்றுப் பாடல்களில் ஒன்றைத்தான் வெளியிட இருக்கின்றோம். அதென்ன கடைமொழி மாற்றுப் பாடல்!. ஐயம் புரிகின்றது. ஆனால் அதைக் கூறிவிட்டால் பாடலின் சுவை குறைத்துவிடும். ஆகவே அதைப்பற்றி பாடலின் முடிவில் பார்ப்போம்.

பாடல்:

கொன்றை மலர்தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்றுகுழல் ஊதினான் நீள்சடையன் - பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்
சிக்கலிலே வாழும் சிவன்.


விளக்கம்:

கொன்றை என்பது ஒரு வகை மலர். இது சிவபெருமானின் திருவடையாள மலர். இது சிவபெருமானுக்கே உரிய மலராகும். இம்மலருக்கு "சொர்ண புஷ்பம்" என்ற ஒரு பெயரும் உண்டு. அவ்வாறு பெருமையடைய மலரை கோபாலன் (திருமால்) அணிதிருந்தார்(தரித்தான்) என்று புலவர் கூறியுள்ளார்.

கோல் என்றால் மரக்கிளையில் உள்ள குச்சி. அதாவது மூங்கில் மரக்கிளையில் உள்ளகுச்சியை எடுத்து சிவபெருமான் (நீள்சடையன்) புல்லாங்குழல் ஊதினார் என்றும் புலவர் கூறுகின்றார். அதெப்படி கண்ணன் தானே குழல் ஊதுவார் என்ற கேள்வி நம் பயணிகளுக்கு வருவது எங்களுக்குப் புரிகின்றது.

அக்கு என்றால் ருத்திராட்சம். அதாவது பொன் போன்ற ருத்திராட்சத்தை திருமால் (மாயன்) அணிந்திருந்தார் என்றும் புலவர் கூறுகின்றார். இங்கும் சிவன்தானே ருத்திராட்சம் அணிவார் என்று பயணிகளுக்கு சந்தேகம் வருவது புரிகின்றது.

சிக்கல் என்பது நாகைப் பட்டினத்திற்கு அருகில் உள்ள ஒரு சிவதலம். இங்கு சிங்காரவேலரும் மிகப் பிரபலம். வசிட்டர் சிவபெருமானை தரிசித்த தலம். அவ்வாறு பெருமையுடைய சிக்கலிலே வாழும் சிவன் பாம்பினாலான மெத்தையிலே (அரவுஅணை) கண் மூடி உறங்கினார் என்றும் புலவர் கூறுகின்றார். இங்கும் திருமால் தானே பாற்கடலிலே ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார் என்று பயணிகள் மனதில் நினைப்பது புரிகின்றது. ஆனால் புலவர் அவ்வாறுதானே பாடியிருக்கின்றார்.

இங்குதான் நமது புலவர் கடைமொழி மாற்றை இலாவகமாகக் கையாண்டுள்ளார். இப்பொழுது கடைமொழி மாற்று என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஒரு பாடலின் முடிவில் உள்ள கடைசி சீரையோ அல்லது கடைசி அடியையோ முதலாவதாக மாற்றிப் படித்து பொருள் காணவேண்டிய பாடல்களை கடை மொழி மாற்றுப் பாடல் என்று வகை பிரித்துள்ளனர் நமது முன்னோர்.

இப்பாடலில் கடைசி அடியை பாடலின் முதல் அடியாக மாற்றிப் பாடினால் பாடல்களின் பொருள் சரியாக விளங்கும்.

சிக்கலிலே வாழும் சிவன்
கொன்றை மலர்தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்றுகுழல் ஊதினான் நீள்சடையன் - பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்

பாடலை மேலுள்ளவாறு படித்தால், சிக்கலில் இருக்கும் சிவபெருமான் கொன்றை மலர் மாலையைத் தன் மார்பில் அணிந்திருந்தார் என்றும் , கண்ணன் (கோபாலன்) புல்லாங்குழல் கொண்டு நின்று ஊதினார் என்றும், நீண்ட சடை உடைய சிவபெருமான் ருத்திராட்சம் அணிந்திருந்தார் என்றும், திருமால் (மாயன்) பாற்க்கடலில் ஆதிசேஷன்(அரவுஅணை ) மீது துயில் கொண்டிருந்தார் என்று பொருள் படும்படி பாடல் அமையும்.

இப்பொழுது பயணிகளுக்கு கடைமொழி மாற்று என்றால் என்னவென்று புரிந்திருக்குமென்று நாங்கள் முழுமையாக நம்புகின்றோம். இவ்வாறெல்லாம் பாடல் பாடுவதில் நமது புலவருக்கு நிகர் நமது புலவர் தான்.

பாடல் பிடித்திருந்தால் கருத்துக்களை வெளியிடவும்.

Sunday, September 13, 2009

காளமேகப்புலவர் தில்லை சிவகாமி அம்மை மீது பாடிய வஞ்சப்புகழ்ச்சிப் பாடல்


காளமேகப்புலவர் தில்லையில் சிவகாமி அம்மையைக் கண்டு தருசிக்கும் போது பாடிய வஞ்சப் புகழ்ச்சி அணியில் அமைந்தப் பாடலையே இன்று நாம் இந்தப் பதிவில் பயணிகளுக்கு விருந்தாக்குகின்றோம். இப்பாடலை இரட்டுற மொழிதல் (சிலைடை) அணிப் பாடல் என்றும் கூறலாம்.

வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது ஒருவரைத் திட்டுவது போல் பாராட்டுவது ஆகும். இந்த அணிப் புலமையில் நமது காளமேகப்புலவர், ஒளவையார், திருவள்ளுவர் போன்ற தமிழ்ப் புலவர்கள் சிறந்து விளங்கியிள்ளனர்.

பாடல்:

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!


விளக்கம்:

இந்தப்பாடல் வஞ்சப் புகழ்ச்சியாகவும், இரு பொருள் தரும்படியாகவும் அமைந்துள்ளது என்பதனைப் பயணிகளுக்கு முன்பே கூறியுள்ளோம். ஆகவே முதலில் திட்டுவது போல் உள்ள பாடலின் பொருளைப் பார்ப்போம்.

கோன் என்றால் ஆடு மற்றும் மாடுகள் வைத்து மேய்ச்சல் தொழில் செய்யும் இடைக் குல ஆண்களை அழைக்கும் சொல். அதாவது மதுரையில் வசிக்கும் ஒரு மாடு மேய்ப்பவனின் தங்கை வீட்டைவிட்டு வெளியேறி தில்லைநகரில் உள்ள ஆடு மேய்ப்பவனுக்கு மனைவியாகினாள்.

ஆடுகள் மேய்க்க ஆந்தையைப் (கோட்டான்) போல் ஒரு மகனையும் பெற்றாள். இங்கு இடைச்சி என்பது கோன் என்ற வார்த்தை போன்று அந்த இனத்தைச் சேர்ந்த பெண்களை அழைக்கும் வார்த்தையாகும். சிற்றிடைச்சி என்றால் சிறிய இடைகுலப்பெண் என்று பொருள். இவ்வாறு திட்டுவது போல் பாடலைப் புலவர் பாடியுள்ளார்.

ஆனால் இந்தப் பாடலுக்கான உட்கருத்தைப் பார்த்தோமெனில் பாடலின் பொருள் இன்னும் களிப்பாக இருக்கும்.

தமிழில் கோன் என்றால் அரசன் அல்லது ஆண்டவன் என்னும் பொருள்களும் உள்ளது. இங்கு மாட்டுகோன் என்று புலவர் குறிப்பிட்டிருப்பது ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்த கண்ணபிரான் அவர்களயே. அதே போல் தமிழில் ஆடு என்றால் நடனம் என்று மற்றொரு பொருள் உள்ளது. அதாவது ஆட்டுக்கோன் என்று புலவர் குறிப்பிட்டுள்ளது ஆடலரசன் தில்லையில் வாழும் நடராஜமூர்த்தி அவர்களையே.

அதாவது மதுரையில் உள்ள சுந்தரராஜ பெருமாளின் தங்கை மீனாட்சி அம்மை மதுரை நகரை விட்டு சிவகாமி அம்மையாராக தில்லைநகரில் அவதாரம் எடுத்து அந்நகரில் ஆடலுக்குப் பெயர்போன எம்பெருமான் தில்லைவாழ் நடராஜமூர்த்தியைத் திருமணம் செய்துகொண்டார்கள் என்பதே முதல் இரண்டு அடிகளின் பொருள்.

அதென்ன குட்டிமரிக்க ஒரு கோட்டானைப் பெற்றாள்?. இங்குதான் நம் புலவர் சொல் விளையாட்டைப் இலாவகமாக கையாண்டுள்ளார். குட்டிமரிக்க என்றால் குட்டிகளைக் கிடையில் அமர்த்துவது என்பது போக, பெருக்கல் குறி போன்று கைகளை குறுக்கே வைத்து தலையில் குட்டிக்கொள்வது (மரித்துக் குட்டுவது ) என்றும் இன்னும் ஒரு பொருள் உள்ளது.

கோட்டானை என்பது கோடு மற்றும் ஆனை என்ற இரண்டு சொற்களின் கூட்டாகும். இங்கு கோடு என்பது ஒரு தந்தம் அல்லது கொம்பு என்று பொருள் தருகிறது. ஆனை என்பது யானையைக் குறிக்கிறது. அதாவது ஒரு தந்தமுடைய யானைமுகமுடைய விநாயகரைக் குறிப்பிடும் சொல்லே கோட்டனை.

அதாவது விநாயகரை வணங்கும் பொழுது அனைவரும் கைகளை பெருக்கல்குறி போல் வைத்து அவரவர் தலையில் குட்டி வணங்குவர். அதையே புலவர் அவ்வாறு வணங்குவதற்கு ஒரு மகனை இந்த உலகுக்குப் பெற்றுத் தந்தாள் என்று மூன்றாவது அடியில் கூறியுள்ளார்.

அதென்ன கட்டிமணி சிற்றிடைச்சி? மணியால் செய்யப்பட்ட மேகலை என்னும் ஒட்டியாணத்தைத் தன் சிறிய இடையில் அணிந்திருக்கும் சிவகாமி அம்மையார் என்று தன் கடைசி அடியில் புலவர் அம்பாளை வர்ணித்துள்ளார்.

இவ்வாறு வஞ்சப் புகழ்ச்சி மற்றும் சிலைடை அணிகள் அமைந்த இந்தப்பாடல் பயணிகள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பாடலைப் பயணிகளுக்குப் பதிவாக வெளியிட்டுள்ளோம்.

படித்துப் பிடித்திருந்தால் கருத்துகளைப் பதிவு செய்யவும்.

Saturday, September 5, 2009

காளமேகப்புலவரின் வசையும் வசை மீட்சிப் பாடலும்

அதென்ன வசை என்ற கேள்வி பயணிகளுக்குத் தோன்றுவது எங்களுக்குப் புரிகின்றது. வசை என்பது ஒருவரை நோக்கி கொடும் சொற்களால் திட்டுவது. வசை மீட்சி என்றால் அந்த வசையைப் புகழாக மாற்றுவது. அப்படி காளமேகப்புலவர் வசை பாடும் அளவுக்கு குற்றம் செய்தது யாரென்று பார்ப்போம்.

ஒரு முறை நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தான் வருணகுலாதித்தன் என்பவனது சத்திரத்திற்கு புலவர் உணவு அருந்துவதற்குச் சென்றிருந்தார். அப்போது நீண்ட நேரமாகியும் உணவு பரிமாறப்படவில்லை. ஆகவே கோபமடைந்த புலவர் வசைப் பாடலைப் பாடினார்.

பாடல்:

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி
உலையில்இட ஊர்அடங்கும் ; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்.


விளக்கம்:

இந்த ஒரு பாடலுக்குள்ளே வசையும் உள்ளது வசை மீட்சியும் உள்ளது. எப்படியென்று பயணிகளுக்கு ஆச்சர்யம் உண்டாவது எங்களுக்குப் புரிகின்றது. முதலில் வசைக்கானப் பொருளைப் பாப்போம்.

வசை:

நீண்ட அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் சூரியன் மறையும் (மாலை நேரத்தில்) பொழுது அரிசி வரும். ஊரில் உள்ள அனைவரும் தூங்கிய பின்னரே அதை உலையிலிட்டு உணவாக்குவர். அதை உண்பவர்க்கு பரிமாறும் பொழுது நடுஇரவு ஆகிவிடும் என்று வசையாகப் பாடியுள்ளார்.

பாடலைக் கேட்டவுடனே வந்திருப்பது காளமேகப்புலவர் என்று அறிந்துகொண்ட காத்தான், தன் சத்திரத்தின் பெயர் கேட்டுவிடக்கூடாது என்று எண்ணி வசைமீட்சிப் பாடல் பாடுமாறு கேட்டுக்கொண்டான். மறுபடியும் இதே பாடலைப் பாடி புலவர் வேறு விளக்கம் கொடுத்தார்.

வசை மீட்சி:

நீண்ட அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் நாட்டில் பஞ்சம் பட்டினி(அத்தமிக்கும்) உள்ள பொழுது அரிசி மூட்டைகள் கணக்கிலடங்காது வந்து இறங்கும். அதை சமைத்து (உலையில் இட்டு) ஊர்மக்களுக்குக் கொடுக்க அனைவரின் பசியும் அடங்கும். அவ்வாறு சமைக்கப்பட்ட அன்னத்தை(சோறு) இலையில் போடும் பொழுது அது நட்சத்திரத்தைப் போல் பிரகாசிக்கும் என்று வசையாகப் பாடியப் பாடலை வசைமீட்சிப் பாடலாகப் பாடியுள்ளார் நமது புலவர். இவ்வாறெல்லாம் பாடும் நுட்பம் காளமேகப்புலவருக்கே உரியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இந்தப் பாடலில் "ஓர்அகப்பை" என்ற ஒரு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகப்பை என்றால் கரண்டி என்று பொருள். ஏன் ஒரு அகப்பை என்று பயன்படுத்தவில்லை?. ஓர் மற்றும் ஒரு என்பது சுட்டிடைச்சொல் (article like an and a). ஓர் அல்லது ஒரு இந்த சொற்களைத் தொடர்ந்து வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக அமைந்தால் "ஓர்" பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் "ஒரு" பயன்படுத்தப்பட வேண்டும். இங்கு "அகப்பை", அ என்ற உயிர் எழுத்து முதலில் உள்ளதால் இங்கு "ஓர்" பயன்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் கருத்துகளுக்கு ஆவலோடு காத்திருக்கின்றோம்.

Saturday, August 29, 2009

காளமேகப்புலவரின் ககர வரிசைப் பாடல்

தவிர்க்க முடியாத சில காரணங்களால் சிறிய இடைவேளை ஏற்பட்டதற்கு முதலில் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சக வலைப்பூ நண்பர் கில்ஸ் அவர்கள் விரும்பிக்கேட்ட ககர வரிசையில் காளமேகப்புலவர் பாடிய பாடலையே நாங்கள் இன்று பயணிகளுக்குப் பதிவாக வெளியிட இருக்கின்றோம். (ககர வரிசை என்றால் தமிழில் உள்ள க, கா.... வரிசை என்று பயணிகள் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறோம்)

பாடல்:

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!


விளக்கம்:

இப்பாடலைப் பாடலில் உள்ள சீர்ப்படி படித்தால் கடினமாக இருக்கும். ஆகவே இங்கு நாங்கள் பயணிகளுக்காகப் பாடலை சீர் பிரித்து கொடுத்துள்ளோம்.

காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை
கோக்கு கூ காக்கைக்கு கொக்கு ஒக்க - கைக்கைக்கு
காக்கைக்கு கைக்கு ஐக்கு ஆகா !


பாடலை இவ்வாறு சீர் பிரித்துப் பாடலாம். காக்கைக்கு ஆகா கூகை என்பது, இரவில் கூகைக்கு (கோட்டான் அல்லது ஆந்தை) கண் நன்றாகத் தெரியும். ஆனால் காகத்திற்கு இரவில் கண் தெரியாது. ஆகவே இரவில் ஆந்தையும் காகமும் சண்டையிட்டால் ஆந்தையே வெல்லும்.

கூகைக்கு ஆகா காக்கை என்பது காகத்திற்கு பகலில் கண் தெரியும். ஆனால் கூகைக்கு (கோட்டான் அல்லது ஆந்தை) பகலில் கண் தெரியாது. அகவே பகலில் காக்கையும் ஆந்தையும் சண்டையிட்டால் காகமே வெல்லும். .

கோக்கு கூ காக்கைக்கு என்பது, கோ என்றால் மன்னன். அதேபோல் கூ என்றால் உலகம். இங்கு காக்கை என்பது காத்தல் (பாதுகாத்தல்) என்று பொருள். கொக்கு ஒக்க என்பது, கொக்கு என்றால் பறவையினத்தில் ஒன்றான கொக்கைக் குறிக்கும். அதாவது கொக்கு ஒக்க என்றால் "கொக்கைப் போல்" என்று பொருள். அதாவது "ஒரு மன்னனுக்கு அவன் நாட்டைக் காப்பதற்கு கொக்கு தனக்குத் தேவையான உணவு வரும்வரைக் காத்திருப்பது போல் காத்திருக்கவேண்டும்" என்பது இந்த அடியின் பொருள்.

கைக்கைக்கு என்றால் "பகையை எதிர்த்து" என்று பொருள். காக்கைக்கு என்பது காத்தல் (பாதுகாத்தல்) என்று பொருள். கைக்கு ஐக்கு ஆகா என்றால் திறமைமிக்க மன்னனுக்குக் கூட கைக்கு எட்டாமல் போய்விடும் என்று பொருள்.

அதாவது ஒரு மன்னனுக்கு அவன் நாட்டைக் காப்பதற்குக் கொக்கு தனக்குத் தேவையான உணவு வரும்வரைக் காத்திருப்பது போல் காத்திருக்கவேண்டும். இல்லையெனில் பகையை எதிர்த்து நாட்டைக் காத்தல் என்பது திறமைமிக்க மன்னனுக்குக் கூட கைக்கு எட்டாமல் போய்விடும் என்பதே இரண்டு மற்றும் மூன்றாவது அடியின் பொருள்.

இவ்வாறு பல சிறப்புகள் கொண்ட பல்சுவைப் பாடல்களைப் படுவதில் வல்லவரான காளமேகப்புலவர் இன்னும் சிறந்த பாடல்களெல்லாம் பாடியுள்ளார். அவைகளையும் இனிவரும் பதிவுகளில் பார்ப்போம்.

பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய மறவாதீர்.

Wednesday, August 12, 2009

கலைஞானியின் பொன்விழா

12-08-1959 இல் 'அம்மாவும் நீயே அப்பாவும் 'நீயே என்று சின்னஞ்சிறு பாலகனாக 'களத்தூர் கண்ணம்மா' வில் தொடங்கியப் பயணம் பத்து அவதாரங்கள் எடுத்த பின்பும் இன்னும் இடையறாது ஓடிக் கொண்டிருக்கின்றது.



இன்றோடு பத்மஸ்ரீ கமல்ஹாசன் திரையுலகில் காலடி எடுத்து வைத்து ஐம்பதாண்டுகள். வேறு எந்த நடிகருக்கும் எளிதில் கிடைத்துவிட முடியாத சிறப்பு இது.




முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசியவிருது. பின்பு இன்னும் மூன்று தேசியவிருதுகள். ஐந்து மொழிகளில் நடித்த சிறப்பு, மேலும் பல்வேறு சாதனைகள். நடன இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என நிறைய முகங்கள். கடந்த முப்பதாண்டு கால தமிழ் சினிமா வளர்ச்சியின் எந்த காலகட்டத்திலும் தவிர்க்க முடியாத ஒரு பெயர் கமல்ஹாசன். எவ்வளவு புகழப்படுகின்றாரோ அவ்வளவு விமர்சனங்களையும் சந்திக்கத் தவறியதில்லை.


இவரின் தனிப்பட்ட வாழ்க்கை சரியில்லை, மேலும் இவர் படத்தில் முத்தக்காட்சி அதிகம் இருக்கும், இவரின் பல படங்கள் வேற்று மொழிப்படங்களின் தாக்கத்தினால் எடுக்கப்பட்டவை என நிறைய குற்றச்சாட்டுகள். மன்னிக்கவும் இவரைப்பற்றி விமர்சிக்கவல்ல இந்தப்பதிவு. மேலும் இது கமலிற்கு துதிபாடும் நோக்கிலும் எழுதப்பட்டதல்ல.

ஐம்பது ஆண்டுகள் கடந்தும் சளைக்காமல் தமிழ் சினிமாவின் புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாயகனுக்கு செலுத்துப்படும் ஒரு சிறு மரியாதை.