Tuesday, June 30, 2009

சினிமா

எப்படியோ வலைப்பதிவு தொடங்கியாச்சு, இனி எதாவது எழுதியே தீரனும்...அப்பத்தான் என்ன எழுதலாம்னு யோசிச்சப்ப, நம்ம பஸ்ல போன வாரம் முழுக்க விஜய் அவார்ட்ஸ் பத்திதான் பேச்சு....ஆனா யாரும் அத பாராட்டிப்பேசின மாதிரி தெரியல...சரி விஜய் அவார்ட்ஸ் பத்தி இப்ப எழுதலாம்னு நினைச்சப்பதான், நம்ம சக பதிவர் தமிழ்மாங்கனி அவங்க பதிவுல போதுமான அளவுக்குக் காய்ச்சி எடுத்துட்டாங்க... தமிழ்மாங்கனிக்கு 'அபியும் நானும்' படத்துக்கு விருது கொடுக்கலைனு வருத்தம்... எனக்கு 'அஞ்சாதே' படத்துக்கு ஒரு விருது கூட கொடுக்காம விட்டது ரொம்ப வருத்தம்....இந்த விஜய் அவார்ட்ஸ் உண்மையிலயே மக்கள் தேர்ந்தெடுத்தது தானான்னு சந்தேகம் வருது....நிகழ்ச்சித்தொகுப்பாளர் கோபி ரொம்ப சீன் போட்டு யாரையும் ஒழுங்கா பேசவிடாம பண்ணிட்டாரு...அடுத்த வருடம் கண்டிப்பா இந்த நிகழ்ச்சிய பார்க்கக்கூடாது... ( சரி நம்ம வருத்தத்த சொல்லியாச்சு !!!)

'ஓவர்பீலா' உலகநாதன் பக்கம்:


நம்ம பஸ்ல தினம் வரும் பயணி 'ஓவர்பீலா' உலகநாதன் அவர்கள், சினிமா & TV நிகழ்ச்சி, இந்த மாதிரி விஷயத்துல மூழ்கி முத்தெடுத்தவர்...இந்தப்பதிவுல அவர்தான் உங்களிடம் பேசப்போகின்றார்...


நம்ம ஓவர்பீலா உலகநாதன் போன வாரம் 'A Wednesday' ஹிந்திப்படம் பாத்தாராம்...அத பத்தி இனி அவரே சொல்றாரு, படிங்க....





















இந்த படத்த பத்தி பெருசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல!!!!


சாது மிரண்டால் நாடு கொள்ளாது, இந்த பழமொழிதான் இந்த படத்தின் சாராம்சம்...சாதாரண மனிதன் எப்படி தனியொருவனாக நான்கு தீவிரவாதிகளை அழிக்கின்றான் என்பது தான் கதை...நகரின் போலீஸ் உயர் அதிகாரி தான் ஒய்வு பெறுவதற்கு முன்பு, தான் சந்தித்ததிலேயே முக்கியமான வழக்கு என்ன என்பது பற்றி நினைத்துப் பார்ப்பதுபோல் கதை தொடங்குகின்றது...அந்த வழக்கு இதுவரை எங்கும் பதிவாகவில்லை மற்றும் அது ஒரு சாதாரண மனிதனைப் பற்றியது...ஒரு மனிதன் அந்த போலீஸ் உயர் அதிகாரியைத் தொடர்புகொண்டு தான் நகரின் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அதனால் ஏதும் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க வேண்டுமானால், தன் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்றும் கூறுகின்றான்...அவன் கேட்பது பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் தொடர்புடைய நான்கு முக்கியத் தீவிரவாதிகளை...போலீஸின் உதவி கொண்டே அந்த தீவிரவாதிகளை எப்படி அழிக்கின்றான் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்...வழக்கம் போல நாயகன் அவர்களைக் கொள்வதற்கு காரணங்கள் கூறுகின்றான்...

படத்தின் பிளஸ்:

நசுரிதீன் ஷா மற்றும் அனுபம் கேர் இருவரின் நடிப்பு
கதையின் நாயகன் தான் ஏன் தீவிரவாதிகளை ஒழிக்க எண்ணினேன் என்பதற்கு அவர் கூறும் காரணங்கள்...(இந்த இடத்தில வசனங்கள் அருமை!!!)
படம் நீளம் குறைவு...அதனால் விறுவிறுப்புக் குறையவில்லை

படத்தின் மைனஸ்:

லாஜிக் சுத்தமாக இல்லை
சாதாரண மனிதன் தனிஒருவனாக வெடிமருந்து வாங்கி வந்து வெடிகுண்டு தயார் செய்வது...( இதற்கு நாயகன் இண்டர்நெட்டில் தேடி இதை எல்லாம் கண்டுபிடித்ததாக சொல்கிறார்...சரி என்று ஒத்துக்கொண்டாலும் அவர் எப்படி சுலபமாக RDX வாங்க முடியும் என்பது போன்ற சில கேள்விகள் நம் மனதில் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை )


இந்தப்படத்தின் சாராம்சத்தை ஒத்து நம் தமிழில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன (இயக்குனர் ஷங்கரின் பெரும்பான்மையான படங்கள்) இருந்தாலும் இந்தப்படம் எந்த விதத்திலும் அவற்றிலிருந்து வேறுபடவில்லை...ஏன் நம் ஊரில் மட்டும் மொழி வேறுபட்டாலும் சிந்தனை வேறுபடவில்லை என்று இந்த படங்களின் மூலம் அடிக்கடி நிரூபித்துக் காட்டுகின்றார்கள் என்று புரியவில்லை...





இதை தமிழில் வேறு எடுக்கின்றார்கள். இங்கு கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் நடிக்கின்றார்கள். (இருவரின் நடிப்புக்கும் சரியான தீனி!!).கண்டிப்பாக படத்தின் நீளம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் படம் நன்றாக வரும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ஒரு வேற்றுமொழி படத்தால் உந்தப்பட்டு அதை இந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி எடுப்பது என்பது வேறு.அந்த படத்தை அப்படியே ரீமேக் செய்வது என்பது வேறு. நம் ஆட்கள் இரண்டாவதை தான் எப்போதும் செய்வார்கள்



Saturday, June 27, 2009

வணக்கம்!!!

வலைப்பதிவுலகின் நண்பர்களே வணக்கம்...

இந்த வலைப்பதிவிற்கு நாங்கள் 23-C என்று பெயர் வைக்கக் காரணம், பெசன்ட் நகர் அப்டினாலே எல்லாருக்கும் முதலில் மனதில் தோன்றுவது பீச் தான்.ஆனா வலைப்பதிவுத் தலைப்பிற்கு அந்த பெயர் கிடைக்காததால் இந்தத் தலைப்பிற்கு மாறிவிட்டோம்.இந்த பஸ் ஏற்கனவே தமிழ் சினிமாவில பிரபலம்.('பார்த்தேன் ரசித்தேன்' படத்துல ஹீரோயின் லைலா இந்த பஸ்லதான் போனாங்க ).

அதனால இப்போது முதல் உங்களுக்கு பெசன்ட் நகர்னா 23-C பஸ் தான் தோணனும்.

பெசன்ட் நகரிலிருந்து கிளம்பும் இந்த பேருந்து, அது பார்க்கும், கவனிக்கும் விஷயங்கள், அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் , பார்த்த படங்கள் (உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை),பணிமனை டீக்கடையில் (முக்கியமா டாஸ்மாக்) நடக்கும் காரசாரமான அரசியல் விஷயங்கள் (லோக்கல் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை), முதலியவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகின்றது.

இதல்லாம் சொல்ற நீங்க யாருன்னு உங்களுக்கு தோணலாம்...அட இந்த 23-C பஸ் டிரைவர்,கண்டக்டர்னு நினைச்சிக்கோங்க...(அப்பதான் நாங்க அடி வாங்காம எஸ்கேப் ஆக முடியும்!!!)

இந்த வலைப்பதிவிற்கு உங்களின் மேலான ஆதரவினைத் தந்து எங்களை வெற்றி பெறச் செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்...
(பிற்காலத்தில் அரசியல் பிரவேசம் பண்ணும்போது இப்டிதான கேக்கணும்..அதான் இப்பவே முன்னோட்டம் பாத்துக்கறோம்...எப்புடி???)