Saturday, July 25, 2009

பரமசிவனுக்கு ஆறுதலையாம்!...........

பரமசிவனுக்கு ஆறு தலையா? அவர் பையன் முருகனுக்குத் தானே ஆறு தலை என்ற சந்தேகம் பயணிகளுக்கு வருவதில் ஆச்சர்யம் இல்லை. இவ்வாறு ஒரு பாடலில் சொல்லியிருப்பது நம்ம காளமேகப்புலவர் தாங்க.

அவருக்கும் மட்டும் இல்லாமல் முருகன், விநாயகர், திருமால் மற்றும் சிவனின் பக்தர்களுக்கும் ஆறுதலைன்னு சொல்லியிருக்கிறார். எப்படி பரமசிவனுக்கு ஆறுதலைன்னு யோசித்துக்கொண்டே பதிவைப் படிக்க ஆரம்பிங்க.

சங்கரர்க்கும் ஆறுதலை; சண்முகற்கும் ஆறுதலை;
ஐங்கரற்கும் மாறுதலை ஆனதே - சங்கைப்
பிடித்தோர்க்கும் மாறுதலை; பித்தா! நின்பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலைப் பார்!


விளக்கம்:
சிவபெருமான் தலையில் கங்கா தேவியைச் (ஆறு) சுமந்திருப்பதால் அவருக்கு ஆறுதலைகள் என்றும், முருகன் ஆறு கமலத்தில்(தாமரை) ஆறு உருவங்கள் ஆகப் பிறந்து பின்பு ஓன்று சேர்ந்ததால் அவருக்கு ஆறுதலைகள் என்றும் பாடியிருக்கிறார்.

ஐங்கரன் என்பவர் விநாயகர். அவருக்கு எவ்வாறு ஆறுதலை என்ற சந்தேகம் பயணிகளுக்கு வரலாம். இங்கு தான் புலவர் அவருடைய சொல் நயத்தை கையாண்டுள்ளார். இங்கு அது ஆறுதலை இல்லை மாறுதலை. அதாவது விநாயகருக்கு மனிதத் தலை இல்லாமல் மாறாக யானையின் தலை இருப்பதை மாறுதலை (மாற்றுத் தலை) என்று கூறியுள்ளார்.

சங்கைக் கையில் வைத்துள்ளவர் திருமால். அவருடைய நரசிங்க அவதாரத்தில் அவரது தலை சிங்கத்தின் தலை. கூர்ம அவதாரத்தில் பன்றியின் தலை. அகவே அவருக்கும் மாறுதலை(மாற்றுத்தலை) என்று சொல் நயத்துடன் கூறியுள்ளார். இந்த அடிக்கு இன்னும் ஒரு அர்த்தமும் உள்ளது.

(சங்கைப் பிடித்தோர் - பாற்கடலில் வாசுகிப் பாம்பு கக்கிய விஷத்தை சிவபெருமான் உண்ணும் பொது உமையாள் அவர் கழுத்தில் உள்ள சங்கைப் பிடித்தார். அப்போது அந்த விஷம் கழுத்தில் பரவியது. கழுத்தில் பரவிய விஷத்தை(சங்கைப் பிடித்தது விஷம்) கக்கிய வாசுகி பாம்பின் தலைவன் ஆதிசேஷன். அவர் திருமாலின் அவதாரம். அகவே திருமாலுக்கு பாம்பின் தலை இருப்பதால் அவருக்கும் மாறுதலை(மாற்றுத் தலை) என்றும் கூறலாம்.)

பித்தா - பித்தன் என்பது சிவனின் பெயர். அதாவது சிவனின் பாதத்தை சரணடைந்தவர்க்கு அவர்கள் அடையும் ஆறுதலைப் பார் என்று வியந்து கூறுவது போல் பாடலை சொல் நயத்துடன் எழுதியுள்ளார்.

பயணிகளுக்குப் பதிவு பிடித்திருந்தால் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும்.



தெளிவு!

சற்றே பெரிய சிறுகதை!
சுவர்க்கடிகாரம் இரவு பத்து மணியைக் காட்டியது. அழுது வீங்கிய கண்களுடன் இருந்த நித்யா டிவியை நிறுத்திவிட்டு தன் அறையிலிருந்து வீட்டின் முகப்பறைக்கு வந்தாள். நவீன் இன்னும் வரவில்லை.

சரி இப்பொது இவர்களைப் பற்றி சிறு அறிமுகம்!

நித்யாவைப் பார்ப்பவர் எவரும் அவளுக்கு இருபத்தைந்து வயதுதான் இருக்குமென்று சரியாக கணித்து விடுவர். எவரையும் சீக்கிரம் வசியம் செய்துவிடும் அழகு, ஒல்லியான தேகம். கல்யாணமாகி ஒரு வருடம் கூட இன்னும் முடியவில்லை. அதற்குள் அவளுக்கும் நவீனிற்கும் தினமும் எதாவது ஒரு விஷயத்தில் மனம் ஒத்துபோகாமல் அடிக்கடி சண்டை தான். அவளுக்கு வாழ்கையின் மீதே ஒரு வெறுப்பு வந்துவிட்டதை நவீனும் கவனிக்காமலில்லை.

நவீன் ஒரு பெரிய கம்பெனியில் சாப்ட்வேர் துறையில் மேனேஜர். பொறுப்புகள் அதிகமான வேலை. சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வர முடியாது. சில சமயம் வார விடுமுறை நாட்களில் எங்காவது நித்யாவுடன் வெளியில் செல்லும்போது அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து உடனடியாக வரச் சொல்வார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் இவனும் செல்லவேண்டியதாகிவிடும். சென்று மீண்டும் வீட்டிற்கு வந்தால் இருவருக்கும் மறுபடி பிரச்சனை தான். அதுபோல் நித்யாவும் சில நேரம் விடுமுறை நாட்களில் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கும். அன்றைக்கு மட்டும்தான் என்றில்லை, விடுமுறை நாட்களில் இருவரும் ஒன்றாக இருந்தாலும், எதாவது ஒரு சிறு விஷயத்திற்காக பேச ஆரம்பித்து அது மீண்டும் சண்டையில் தான் வந்து முடியும்.இத்தனைக்கும் இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள்தான். ஒரே கம்பெனியில் தான் வேலை செய்தார்கள். நவீனின் பணியைப் பற்றி முழுதும் தெரிந்தும், இவன் தான் தன் துணையாக வேண்டுமென்று நித்யா, விரும்பி ஏற்றுக்கொண்டாள். கல்யாணத்திற்குப்பின் வேறு கம்பெனியில் இன்னும் அதிக சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தாள்.

இவ்வளவு அறிமுகம் போதும்.மீண்டும் கதைக்கு வருவோம்.

இன்னும் நவீன் வரவில்லை. எங்கு சென்றிருப்பான் என்று யோசித்தாள். ஒருவேளை அந்த கீதாவை அவள் வீட்டில் இறக்கிவிட்டு அங்கேயே சாப்பிடுகின்றானோ. நித்யா, திருமணம் என்னும் பெரிய குழிக்குள் தெரிந்தே விழுந்து விட்டதாக நினைத்து அழுதாள். சற்று உணர்ச்சிவசப்பட்டவளாய், 'கடவுளே! எனக்கு எதாவது ஒரு வழி சொல்லன்!' என்று புலம்பினாள். தீடீரென்று ஒரு வெளிச்சம். இப்பொது நித்யாவின் எதிரே ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். சாந்தமான முகம், வெண்மையான உடை, உதட்டில் சிறு புன்னகை, பார்ப்பதற்கு டிவி நாடகத்தில் வரும் சாமியார் போலிருந்தார். நித்யா சற்று பயந்தாலும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரிடம் பேச ஆரம்பித்தாள்.

'நீங்க யாரு? எப்படி வந்தீங்க?'

'நீதானம்மா என்னை அழைத்தாய்.'

'நானா?'

'ஆம். கடவுளே என்றாயே!'

'அப்டினா நீங்க கடவுளா?'

'பாக்க வித்தியாசமா இருக்கீங்க? டிரஸ் கூட வேற மாதிரியிருக்கு. நீங்க எந்த சாமி? அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி, நீங்க உண்மையா சாமி தானா?'

'பரவாயில்லை. சற்று முன் அழுதாலும் உன் கேள்விகள் அனைத்தும் தெளிவாகத் தான் உள்ளன. எனக்கு இது தான் உருவம். உங்கள் பூஜை அறையில் தொங்கும் படங்கள் எல்லாம் நீங்கள் உருவாக்கியக் கற்பனைப் பாத்திரங்கள் தான். உனக்காக எதுவும் சித்து வேலைகள் செய்து காட்ட முடியாது. என்னால் உங்களைப் படைக்க தான் முடியும். மற்றபடி, பாட்ஷா படத்தில் ரஜினி சொல்வதுபோல் வாழ்வது எல்லாம் உங்கள் கையில் தான் உள்ளது, இன்னும் நீ என்னை நம்பவில்லை என்றால் அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது. எதோ என்னை அழைத்தாயே என்று வந்தேன்.வேண்டாமென்றால் சென்று விடுகிறேன்'

'மன்னிச்சிடுங்க. என் கஷ்டத்த நினச்சு தான் உங்ககிட்ட புலம்பினன்'

'என்ன கஷ்டம்?'

'வாழவே பிடிக்கல'

'திருமணம் ஆகிவிட்டதா?'

'ஒரு வருஷம் முடியப் போகுது'

'அதற்குள், உனக்கு வாழ்க்கை அலுத்து விட்டதா? அல்லது உன் கணவனைப் பிடிக்கவில்லையா?'

'நவீனைப் பிடிக்கவில்லை'

'நவீன்?'

'என் கணவன், காதலனாக இருந்து கணவனாக மாறியவன்.'

'உங்களுக்குள் என்ன பிரச்சனை?'

'அவனுக்கு எப்போதும் வேலைதான் முக்கியம். அதிகம் சம்பாதிக்க வேண்டும்.எனக்காக நேரம் செலவு செய்ய அவனுக்கு மனமில்லை. நானும் தான் வேலைக்கு போறன். ஆனா சீக்கிரம் வரல?'

'ஒருவேளை அவனுக்கு வேலைப்பளு அதிகமோ?'

'அப்டில்லாம் கிடையாது. பணம் தான் முக்கியம் அவனுக்கு. நான் வேலைக்கு போகக் கூடாதாம். வீட்ல இருந்து அவன் அப்பா அம்மாவ நல்லாப் பார்த்துக்கணும். என் பழைய பிரென்ட் கூட போன் பேசக்கூடாது. இப்படி நிறைய கண்டிஷன் போடறான்'

'இப்போதுதான் இப்படி நடந்து கொள்கிறானா?'

'புரியல'

'காதலிக்கும்போது அவன் இவ்வாறுதான் இருந்தானா?

'ஆமா'

'அப்போது உனக்கு இதெல்லாம் தெரியவில்லையா?'

'இல்ல. ஆனா இப்பதான் தெரியுது'

'எத்தனை வருடம் காதலித்தீர்கள்?'

'ஒரு வருடம் தான்'

'அப்படியென்றால் நீ அவனை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. நீ அவனிடம் உன் எதிர்பார்ப்புகளை எடுத்துக்கூறி புரியவைக்கலாம் அல்லவா?'

'அதுக்கு இப்ப நேரமில்ல. எல்லாம் கடந்து போயாச்சு.'

'சரி. என்னதான் செய்வதை உத்தேசம்?'

'விவாகரத்து!'

'அவன் இதற்கு ஒப்புக்கொள்வானா?'

'அதப்பத்தி எனக்கு கவலை இல்ல. அவனும் கூட இப்ப என்னபத்தி பெருசா நினைக்கிறது இல்ல'

'தவறு செய்கின்றாய் மகளே! காதலிக்கும் போது ஒருவரின் நிறைகள் மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் வாழும்போது தான் ஒரு சிறு குறை கூட பெரிதாய்த் தெரியும். இப்பொது நீ தெளிவாகயில்லை அதனால் உன்னால் சரியான முடிவெடுக்க முடியாது. உனக்கு தேவை சில காலம் அமைதி.நவீனை விட்டு சிறிது காலம் பிரிந்திரு. அப்போது தான் உனக்கு அவன் தேவை உனக்கு வேண்டுமா வேண்டாமா என்று தெரியும். உனக்காக நான் நவீனிடமும் பேசுகிறேன். அதற்கு பின் இருவரும் சேர்ந்து ஒரு நல்ல முடிவெடுங்கள்!'

'சரி'

'இன்னும் சில நாட்கள் கழித்து உன்னைப் பார்கிறேன்.அதற்குள் நீ ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கவேண்டும்'

'சரி'

'நான் போய்வருகிறேன். மீண்டும் சந்திப்போம்'

கடவுள் நேரே நவீனின் அலுவலகத்திற்கு சென்றார். அவன் கிளம்பத் தயாராக இருந்தான். தான் நித்யாவின் சொந்தம் என்று அறிமுகம் செய்துகொண்டு அவனிடம் பேசினார். அவனுக்கு குழப்பமாக இருந்தது. இருந்தாலும் அவனும் அவரை அழைத்துக் கொண்டு ஒரு உணவகத்திற்கு சென்றான். கடவுள் சாப்பிட மறுத்துவிட்டார். அவன் மட்டும் சாப்பிட ஆரம்பித்து, அப்பிடியே அவரிடம் பேச்சு கொடுத்தான்.

'உங்கள நான் இப்பதான் மீட் பண்றன் சார். நித்யா கூட உங்கள பத்தி எதுவும் சொல்லல'

'அவளுக்கு இன்றைக்கு தான் என் நினைப்பு வந்தது. என்னை அழைத்தாள். அதனால் அவளை சந்திதேன். சிறிது நேரம் பேசிவிட்டு அப்படியே உங்களைப் பார்க்கலாமென்று வந்தேன். உங்களுக்குள் எதோ பிரச்சனை இருப்பதுபோல் தெரிகின்றது. சரி உங்களை சந்தித்துப் பேசலாமென்று வந்தேன்'

'எல்லாத்தையும் சொன்னாளா?'

'ஆம்'

'என்ன பத்தி தான் தப்பா சொல்லிருப்பா. அவ நல்லவ மாதிரி பேசிருப்பாளே'

'அப்படியில்லை, உங்களை நினைத்து வருந்தினாள்'

'சார், நானும் அவளும் லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணோம்'

'தெரியும்'

'அப்ப கூட லீவ் நாள்னாதான் நாங்க மீட் பண்ண முடியும். நானும் அவளுக்காக அப்ப எந்த கமிட்மென்ட்டும் வச்சிக்கமாட்டன். நல்லா தான் இருந்தோம். இப்ப ஏன் இப்படி நடந்துக்கிரானு தெரியல?. அடிக்கடி ஆபிஸ் போன் பண்ணி என்னபத்தி விசாரிக்கறா.எதாவது ஒரு பொண்ணுகூட பேசினாலும் சந்தேகப்படறா'

'நீங்களும் அவளை எந்த பழைய நண்பர்கள் கூடவும் பேசக்கூடாது என்று சொன்னதாக என்னிடம் கூறினாள்'

'அவ இப்ப அவங்க கூட பேசறதப்பாத்தா எனக்கு முன்ன மாதிரி தெரியல சார்.'

'அப்படியென்றால் உங்களுக்கும் அவள்மேல் சந்தேகம்?'

'ஆமா, அவ இப்பதான் இப்படி மாறிட்டா'

'தவறு உங்களிடமும் உள்ளது. நீங்கள் இவ்வாறு இருந்தால் இதற்கு என்னதான் முடிவு?'

'தெரியல சார்.அவ கூட இப்ப காலம் தள்ள முடியாதுன்னு தெரியுது'

'அப்படியெனில் நீங்களும் விவாகரத்து...'

'ஆமா சார்.அதான் நானும் சொல்ல வந்தன்'

'சரி. உங்களிடமும் நான் அவளுக்கு செய்த உபதேசம் தான் சொல்ல வேண்டியுள்ளது. நீங்கள் இருவரும் சிறிது காலம் தனித்து வாழ்ந்து பின்பு ஒரு முடிவெடுக்கலாமே?'

'அதுக்கு தான் விவாகரத்து !'

'அது நிரந்தரப் பிரிவு. நான் சொல்வது தற்காலிகம் தான். இந்த சிறிது காலப்பிரிவு இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும்.'

'சரி'

'நான் புறப்படுகிறேன்'

'சார் நான் வேணும்னா எங்கயாவது ட்ரோப் பண்ணட்டுமா?'

'நன்றி. நான் பார்த்துக்கொள்கிறேன், இன்னும் சில நாள் கழித்து உங்கள் இருவரையும் சந்திக்கறேன். அப்போது பார்க்கலாம்.வருகிறேன்'

நாட்கள் உருண்டோடின. ஒரு வருடம் முடிந்தது. கடவுள் மீண்டும் வந்தார் நித்யாவைப் பார்க்க. அவள் தன் தாய்வீட்டுற்கு சென்றிருந்தாள்.

'என்ன மகளே, நலமா?'

'வாங்க, உங்கள ரொம்ப நாளா காணோம்னு பார்த்தன்'

'வேறு வேளை இருந்தது. இப்பொது தான் உன் நினைப்பு வந்தது. உடனே உன்னை நாடி வந்தேன். என்ன முடிவெடுத்துள்ளாய்?'

'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கணேஷ் கொஞ்சம் வாங்க'

அவள் குரலுக்கு ஒருவன் 'வரேன்' என்று சொல்லிகொண்டே அவர்கள் இருவரை நோக்கி வந்தான். அவனை நித்யா கடவுளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

'இவர் தான் கணேஷ். கணேஷ் இவர் எங்க தூரத்து சொந்தம். நான் கல்யாணம் பண்ணிக்க போறவர். நான் நீங்க என்ன வந்து பார்த்த அடுத்த நாளே நவீன விட்டு வந்துட்டன். இங்க வேற வேலைல ஜாய்ன் பண்ணன். அங்க தான் கணேஷ் கூட பழக்கம். என்ன பத்தி இவர்கிட்ட எல்லாத்தையும் சொன்னன். இவரும் என்ன புரிஞ்சு என்ன காதலிக்க ஆரம்பிச்சாரு. நானும் சம்மதம் சொல்லிட்டன். நாளைக்கு எங்களுக்கு கல்யாணம்'

கணேஷ் கடவுளைப் பார்த்து 'ஹலோ சார்' என்றான். கடவுள் பதிலுக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு ஏறக்குறைய மயக்கம் வந்தவர் போல அங்கிருந்து உடனே கிளம்பினார். என்ன தான் நடக்கின்றது என்று புரியாதவராய் நேரே நவீனைத் தேடிச் சென்றார்.

நவீனின் அலுவலகம் சென்ற போது அவன் வேறொரு பெண்ணுடன் தன் காரில் ஏறப் போனான். கடவுளைக் கண்டதும் 'ஹலோ சார்' என்றான்.

'நவீன் நலமா?'

'பைன் சார். நீங்க எப்படி இவளவு தூரம்?'

'உங்களை சந்திப்பதற்கு தான்'

'நித்யா?'

'தெரியும். பார்த்தேன். அவள் இவ்வளவு சீக்கிரம் இப்படி முடிவு எடுப்பாள் என்று நினைக்கவில்லை'

'அதெல்லாம் நான் மறந்தாச்சு சார். இவ பேரு கீதா, என் கூடதான் வேளை செய்றா. என்ன பத்தி எல்லாம் தெரியும். நாங்க ரெண்டு பெரும் இப்ப காதலிக்கறோம். சீக்கிரம் கல்யாணம். ஒரு நிமிஷம் சார்..' என்று சொன்னவன் கீதாவை அவருக்கு அறிமுகம் செய்தான்.

'சரி நான் போகின்றேன் நவீன்' என்று அங்கிருந்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நடந்தார்.

இனி யார் புலம்பினாலும் அதைக் கேட்கக் கூடாது என்றும், முக்கியமாக யார் வாழ்க்கையிலும் தலையிடக் கூடாது என்றும் தெளிவான முடிவிற்கு வந்தவராய் நேரே 'டாஸ்மாக்' என்று பெயர்ப்பலகை தொங்கும் கடையை நோக்கிச் சென்றார்.

இதுவரை அவர் யார் புலம்பலுக்கும் செவி கொடுப்பதில்லை.


Thursday, July 23, 2009

பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு!

எல்லோருடைய வலைப்பதிவைப் பார்த்தபின்பு நாமும் கதை எழுத வேண்டும் என்று ஆவல் மேலிட்டது. கதை என்றல் காதல் கதை எழுத நமக்கு விருப்பமில்லை. ஏனென்றால் அது நமக்கு வராது. (இம்சை அரசி, திவ்யா போன்றவர்கள் தான் அதற்கு சரி!).

எதாவது நல்ல தமிழ்சினிமாவைப் பார்த்து அதன் உந்துதலால் எழுதலாம் என்றால் எந்தவொரு நல்ல காதல் கதையும் நம் தமிழ் சினிமாவில் இல்லை. (மன்னிக்கவும், ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நம் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கண்டதும் காதல் ரகம் தான் அதிகம்.). சரி அப்டினா சொந்த கதை? வேணாம், அது இன்னும் கொடுமையாக இருக்கும். அதனால் எதாவது வித்தியாசமாக எழுதலாம் என்று நினைத்துள்ளோம். அதற்கு சற்று அவகாசம் தேவைப்படுகின்றதால், இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்குமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

(இப்பவே கண்ண கட்டுதே! ஒரு கதை எழுத எப்படிலாம் வெளம்பரம் பண்ண வேண்டியிருக்கு!!)

Sunday, July 19, 2009

காளமேகப்புலவரின் மோர்ப் பாடல்...........

காளமேகப்புலவரின் முந்தையப் பதிவிற்குப் பயணிகளின் ஆதரவைப் பார்த்து இந்த இரண்டாவது பதிப்பை உங்களுக்காக இங்கு எழுதியிள்ளோம்.

ஒரு முறை காளமேகப்புலவர் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு ஆய்ச்சியர் குலப் பெண் மோர் விற்றுக் கொண்டு இருந்தாள். அவருக்குத் தாகமாக இருந்ததால் அப்பெண்ணிடம் சென்று ஒரு குவளை மோர் வாங்கிக் குடித்தார். பின்பு குடித்த மோருக்குப் பணம் கொடுத்தார். அவரை புலவர் என்று அறிந்திருந்த அப்பெண் பணம் வேண்டாம் என்றும் பதிலாகத் தன் மோரைப் பற்றி ஒரு பாடல் பாடுமாறும் கேட்டாள்.

அதற்கு புலவர்,
கார்என்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது
நீர் என்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்தபின்
வார்ஒன்றும் மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்தபின்
மோர்என்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!


என்று நகைச்சுவையுடன் பாடல் ஓன்று பாடினார்.

விளக்கம்:
வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயருடன் விளங்குகின்றாய். பின்பு மழையாகப் பொழிந்து நிலத்தில் ஓடும் போது நீர் என்ற பெயருடன் ஓடுகின்றாய். ஆய்ச்சியர் கையில் உள்ள இந்தப் பானையில் வந்தவுடன் மோர் என்று பெயர் பெற்று மூன்று பெயருடன் விளங்குகின்றாயே! என்று வியந்து கூறுவது போல் பாடல் உள்ளது.

அதாவது மோரில் சிறிது தண்ணீர் அதிகமாகக் கலந்து இருந்ததை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்.

பயணிகளே! இந்த வலைப் பூவில் ஒரு மலராத மொட்டாக உள்ள இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். உங்கள் பாராட்டுகள் மட்டுமே எங்களுக்கு உற்சாகம்.

Friday, July 17, 2009

காசேதான் கடவுளப்பா!

ஓவர் பீலா உலகநாதனின் ஒரு டிவி ஷோ விமர்சனம்
பணத்திற்காக உங்கள் குடும்ப மானம் மரியாதையைப் பற்றி கவலைப்படாத மனிதர்களைக் கண்டதுண்டா? அவர்கள் இருபது நம் நாட்டில் தான்.

மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக உள்ள ரீயலிட்டி ஷோ இப்போது நம் நாட்டிலும் வளரத் தொடங்கியுள்ளது. க்ரோர்பதி, கோடீஸ்வரன் வரிசையில் இப்பொது புதிதாய் வந்துள்ள நிகழ்ச்சி 'சச் கா சாம்னா' அதாவது 'உண்மையை சந்தியுங்கள்' என்று பொருள் வரும். (மொமென்ட் ஆப் தி ட்ரூத் என்னும் பிரபலமான நிகழ்ச்சியின் இந்திய காப்பி). இந்த நிகழ்ச்சியில் இருபத்தியொரு கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். மாறாக பொய் சொன்னால் அவர் தோல்வியடைந்து விடுவார். (இதற்காக 'லை டீடக்டர்' என்று சொல்லப்படும் கருவி பயன்படுத்துகிறார்கள். ஒருவர் பொய் சொல்லும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களை வைத்து இது காட்டிகொடுக்கும். இது எந்த அளவிற்கு நம்பத்தன்மை வாய்ந்தது என்று தெரியவில்லை).

இந்த நிகழ்ச்சியில் பெரியவர்கள் அதாவது மேஜர், மட்டுமே கலந்து கொள்ளலாம். (குழந்தைகள் பொய் சொல்லாது என்பதற்காக கூட இருக்கலாம்). முதல் கேள்வியில் ஆரம்பித்து படிப்படியாக ஆயிரம் ரூபாய் முதல் இறுதி கேள்வி வந்தால் ஒரு கோடி பரிசு கிடைக்கும். கலந்துகொள்பவர் குடும்பத்தினரும் நிகழ்ச்சியின்போது உடன் இருப்பார்கள். அவர்களை வைத்துக்கொண்டே சில தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்பார்கள். உதாரணமாக 'உங்கள் அப்பா வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளாரா?' என்பன கேட்கப்படும். நீங்கள் இந்த கேள்விக்கு உண்மையை சொல்ல வேண்டும் மாறாக பதில் சொல்ல விரும்பவில்லை என்றால் போட்டியிலிருந்து விலகி விடலாம். அதுவரை வென்ற பணம் என்ன உள்ளதோ அதை கொடுத்து விடுவார்கள். இதே கேள்வியை வேறு ஒருவர் நம்மிடம் கேட்டால் கண்டிப்பாக நாம் அஹிம்சையை மறந்து அவரை அடிக்கக்கூட செல்வோம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவ்வாறு செய்ய முடியாது. பல கேள்விகள் இது மாதிரிதான் இருக்கும் என்பது நமக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிடும். இது எந்த அளவிற்கு அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் என்று தெரிந்தும் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களை என்னவென்று சொல்வது?இவையனைத்தும் தெரிந்தும் ஏன் கலந்து கொள்ள வேண்டும். காரணம் மிகச்சுலபம், பணம்.

நாம் முன்பு குறிப்பிட்ட இந்தக் கேள்வி ஒருவருக்கு கேட்கப்பட்டது. அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டு விலகிக்கொண்டார்.


ஆசிரியப் பெண்மணி ஒருவர் இந்த நிகழ்ச்சியில் தம் குடும்பத்துடன் .(அம்மா, அப்பா, கணவர்,மகன், அக்கா, அக்காள் கணவர் மற்றும் தம்பி) கலந்து கொண்டார்.

இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள்

- உங்கள் கணவர் அழகா அல்லது உங்கள் அக்காள் கணவர் அழகா?
- உங்கள் கணவர் சாகவேண்டுமென்று என்றாவது நினைத்ததுண்டா?

(மக்களே நம்புங்கள். இந்த கேள்விக்கு அந்தப் பெண்மணி ஆம் என்று பதில் கூறினார். அந்த பதிலை நிலைப்படுத்த, தன் கணவர் ஒரு காலத்தில் குடிகாரராய் இருந்தார் என்றும், அப்போது இவர் தன் கணவர் இவ்வாறு இருப்பதற்கு சாகலாம் என்றும் நினைத்ததாக எதோ ஒரு காரணத்தை உணர்ச்சிவசப்பட்டு பேசினார்).

அடுத்த கேள்வி

- உங்களுக்கு வேறு ஒரு ஆணுடன் உறவு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

இதற்கு அந்தப்பெண் 'இல்லை நான் அவ்வாறு செய்ய மாட்டேன்' என்று பதில் கூறினார். ஆனால் லை-டீடக்டர் கருவி ஒளி எழுப்பவே 'உங்கள் பதில் தவறு என்றும், தாங்கள் பொய் சொல்லியுள்ளீர்கள்' என்றும் தொகுப்பாளர் கூறினார். அதற்கு அப்புறம் அந்தப்பெண் அழுது புரண்டதுதான் மிச்சம். நாளை அந்தப் பெண்ணைப்பற்றி உடன் பணிபுரிபவர்கள்,அவர் பள்ளியில் உள்ள மாணவர்கள் எவ்வளவுக் கேவலமாக நினைப்பார்கள்.சமுதாயத்தில் ஆசிரியர் பணியில் இருக்கும் ஒருவர் பணத்திற்காக ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்? ஏன் இவ்வாறு அசிங்கப்பட வேண்டும்?


இந்த நிகழ்ச்சியில் சில பிரபலங்களும் கலந்து கொள்வார்கள். கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கூட இதில் கலந்து கொண்டு ஒரு கட்டத்தில் உண்மையை சொல்கிறேன் என்று, சச்சினைப் பற்றி அவதூறாகப் பேசிப் பின் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.


ஆனால் இன்றளவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமானோர் விண்ணப்பித்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாக தெரிகின்றது. மக்கள் பணத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கேவலப்படுத்திக் கொள்ளத் தயாராய் உள்ளார்கள்.


இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களோ, 'இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரின் நேர்மையையும், புத்திக்கூர்மையையும் பாராட்டுவதாகவும், இதன்மூலம் மேலும் பல மக்கள் உண்மையைக் காப்பாற்ற முன் வருவார்கள்' என்றும் தெரிவித்துள்ளார்கள்.


இந்த கொடுமையை என்னனு சொல்ல?????


Wednesday, July 15, 2009

கர்மவீரர் காமராஜ்



இன்று
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள். தமிழ் கூறும் பதிவுலகில் யாரும் இதைப்பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. (இதை எழுதும்போது தான் இட்லிவடையாரின் பதிவை கவனித்தேன்)

தெரிந்தவர்களின் பிறந்த நாள், திருமண நாள் இவற்றுக்கு வாழ்த்து சொல்லிப் பதிவு போடும் நாம் கல்விக்கண் திறந்த ஏழைத் தலைவனைப் பற்றி ஏன் எழுதக்கூடாது என்று நினைத்ததால் இந்தப்பதிவு.

தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மை, எளிமை, துணிவு, ஒழுக்கம் இவற்றுக்கு உதாரணமாய் ஒருவரை சொல்லமுடியுமென்றால் அவர் காமராஜர் மட்டும் தான். வருடாவருடம் அரசு சார்பில் அவரின் படத்திற்கு மாலை மரியாதை மட்டும் தரப்படும். ஆனால் அதிகம் கவனிக்கப்படாத தலைவர்கள் பட்டியலில் இவருக்கு முதலிடம் தரலாம். (காந்தி தான் அதிகம் கவனிக்கப்படுகின்றார் - ரூபாய் நோட்டுகளின் மூலம்!). காங்கிரஸ் கட்சி கூட பெயரளவில் இவருக்கு மரியாதையை செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவார்கள். ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பார்க்கும்போது இன்று சற்று கவனிப்பு கம்மிதான். தேர்தல் சமயத்தில் மட்டும் காமராஜர் மீண்டும் உபயோகப்படுத்தப்படுவார். (இது தேவலாம், இன்னும் சிலர் கட்சி விளம்பரத்திற்கு மட்டுமே அவரின் புகைப்படத்தைப் போடுகின்றார்கள் - அதுவும் கூட ஜாதியின் பெயரைச் சொல்லி).

இந்தப்பதிவின் மூலம் காமராஜரின் பெருமைகள் பற்றி நான்கு பேர் தெரிந்துகொண்டாலே போதும். காமராஜர் இல்லாத தமிழ்நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும் என்று அறியவேண்டுமென்றால் அவர் முதல்வராக இருந்த போது கொண்டு வந்தத் திட்டங்களைப் பார்த்தாலே புரியும்.

கல்வி:

பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
கட்டாய/ இலவச கல்வி.
பகல் உணவுத்திட்டம் (இன்றைய சத்துணவு).

அவரின் ஆட்சிக் காலத்தில் இலவசக்கல்வி மூலம் பள்ளி செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது.

தொழில் மேம்பாடு:

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
கல்பாக்கம் அணுமின் நிலையம்
திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை
ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
சேலம் இரும்பு உருக்காலை
மேட்டூர் காகித தொழிற்சாலை
சங்ககிரி துர்கம் இந்திய சிமெண்ட்ஸ்
அரக்கோணம் இலகுரக ஸ்டீல்பிளான்ட் தொழிற்சாலை

தொழிற்பேட்டைகள்:

கிண்டி, அம்பத்தூர், ராணிபேட்டை, மதுரை, விருதுநகர், மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி முதலியன.

அணைகள்:

ஆழியார் - பரம்பிகுளம் அணை
அமராவதி அணை
மலம்புழா அணை
மணிமுத்தாறு அணை
சாத்தனூர் அணை
வைகை அணை
கிருஷ்ணகிரி அணை
மேட்டூர் பாசன கால்வாய்
வாலையார் அணை
மங்களம் அணை
ஆரணியாறு அணை


இதுபோக இரண்டு முறை பாரதப் பிரதமரைத் தேர்வு செய்தவர் (லால்பகதூர் சாஸ்திரி & இந்திரா காந்தி). அதனால் கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்டார்.

இவரின் கே-பிளான் மிகப் பிரபலம். (இந்த காலத்தில் அதற்கு இடமில்லை). அதாவது வயதானவர்கள் அரசு பதவிகளில் இருந்து விலகி கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும். இது தான் அந்த பிளான். இதன் அடிப்படையில் முதலவர் பதவியிலிருந்து விலகினார். (இப்போது புரிகிறதா இந்த பிளான் இன்றைக்கு ஏன் வேலை செய்யாது என்று?).

இவ்வளவு செய்தும் மக்கள் அவரை தேர்தலில் தோற்க செய்தார்கள். அதையும் கூடப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். மற்றவர் போல எதிர்கட்சிகள் செய்த சூழ்ச்சி என்றோ, கள்ளவோட்டு என்றோ சொல்லவில்லை. கட்சி வேறு நட்பு வேறு என்று வாழ்ந்து காட்டினார். அதனால் தான் பெரியார் தொடங்கி அண்ணா வரை இவரைப் பாராட்டாதவர் எவருமில்லை. இவரிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளது. ஆனால் துரதிஷ்ட வசமாக ஓட்டு வாங்குவதற்கு மட்டுமே இவரின் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.


வாழ்க தமிழ்! வளர்க தமிழர் !!

Sunday, July 5, 2009

இலக்கியத்தில் நோயும் மருத்துவமும்..

நம்ம பஸ்ல இப்போ இலக்கியம் கூடப் பேசப்போறோம் .

ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்று ,
முக்காலை ஊன்றி மூவிரண்டு செல்கையில்
ஐந்து தலை நாகம் அழுத்த கடித்துது .
என்று சொல்கிறார்.
அதற்க்கு அந்த மருத்துவர்,
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கி தேய்.
என்று மருத்துவம் சொல்கிறார்.

நோயாளி கூறியதின் விளக்கம் :
முக்காலை ஊன்றி - அவருடைய இரண்டு கால்களுடன் குச்சி ஊன்றி
மூவிரண்டு செல்கையில் - ஆறு நோக்கி போகும் பொழுது
ஐந்து தலை நாகம் அழுத்த கடித்துது - (நெருஞ்சி முள்ளில் ஐந்து பக்கமும் ஐந்து முள் இருக்கும்). அதாவது நெருஞ்சி முள் குத்தியதை பாம்பு கடித்ததாக கூறுகிறார்.

மருத்துவர் கூறியதின் விளக்கம்:
பத்துரதன் - பத்து என்றால் தசம் என்று அர்த்தம். அதாவது தசரதன்.
புத்திரனின் - புத்திரன் என்றால் மகன் . தசரதனின் மகன் ராமன்.
மித்திரனின் - மித்திரன் என்றால் நண்பன். அதாவது ராமனின் நண்பன் சுக்கிரவன்.
சத்துருவின் - சத்துரு என்றால் எதிரி. சுக்கிரவனின் எதிரி வாலி.
பத்தினியின் - பத்தினி என்றால் மனைவி. வாலியின் மனைவியின் பெயர் தாரை.
கால் வாங்கி தேய் - தாரையில் உள்ள காலை எடுத்தால் தரை. அதாவது தரையில் தேய். சரியாகி விடும்.

இந்த பாடலை காளமேகப் புலவர் என்ற சங்க இலக்கியப் புலவர் எழுதியுள்ளார்.
இவர் இது போன்ற பாடல்களிலும் இரு பொருள் தரும் படல்களிகளிலும் சிறப்பு புலமை பெற்று விளங்கியவர். பயணிகளுக்குப் பிடித்திருந்தால் உங்கள் வாசகங்களை பதிவு செய்யுங்கள். இது போன்ற அவருடைய பாடல்களை உங்களுக்காக வலையில் எழுதத் தயாராக இருக்கிறோம்.

Wednesday, July 1, 2009

க்வாட்டர் கோயிந்தும் இலங்கைப் பிரச்சனையும்

நம் பெசன்ட்நகர் பணிமனை அருகேயுள்ள டாஸ்மாக்கில் எப்போதும் சண்டைக்கும் சச்சரவிற்கும் குறைவே இருந்ததில்லை. 'க்வாட்டர்' கோயிந்து அதில் முக்கியமான நபர். ஆள் பக்கா லோக்கல். அரசியல் பேச்சு எங்க வந்தாலும் அங்க இவரு சம்மன் இல்லாம ஆஜராயிடுவாறு.ஆனா இவரு எந்தக் கட்சினு யாருக்கும் தெரியாது. டெய்லி ஒரு கரைவேட்டில இவர பாக்கலாம்.எல்லா கட்சி மீட்டிங்கும் அட்டென்ட் பண்ணுவாரு. ஒரு க்வாட்டர் வாங்கிதரன்னு சொன்னாப் போதும், அந்தக் கட்சிக்கு தற்காலிக கொ.ப.சே இவருதான். ஆனா தேர்தல் சமயத்துல மட்டும் வேளைக்கு ஒரு க்வாட்டர் தேவைப்படும். அது மட்டும் செஞ்சா போதும், இவரு ஓட்டு அவங்களுக்குதான்.


இன்று சட்டசபையில் முதல்வரின் பேச்சைக் கேட்டு நம் கோயிந்து அண்ட் கோ வின் கமெண்ட்ஸ் இதோ...

முதல்வரின் பேச்சு:

தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்தச் செய்ய வேண்டும்.

இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும் இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.


ஒருவர்:

இப்ப எதுக்கு தீடீர்னு இலங்கை அரசுக்கு சப்போர்ட் பண்றாரு?

கோயிந்து:

ராஜபக்சே அவரோட மந்திரி சபைல எதுனா இலாகா தரன்னு சொல்லிருப்பாரு, அதான் இந்தக் கரிசனம். அதுக்காக நம்ம முதல்வர் குடும்பதோட இலங்கை போயிட்டு வந்தாலும் ஆச்சர்யபட்றதுக்கில்ல
.
ஒருவர்:

அப்படிலாம் இல்லபா...நம்ம தமிழருக்காக கடுதாசி போடறாரு, போன் பண்றாரு...ரொம்ப சிரமபடராறு பா. இதுக்காச்சும் மத்திய அரசு பதில் சொல்லணும்பா..

கோயிந்து:

ஒரு பதிலும் வராது. இந்த விஷயம் சீரியஸ்னா அவரே நேர்ல போயிருப்பார்ல. அதனால தான் பிரதமரும் உண்மையான நிலவரத்தப் புரிஞ்சிக்கிட்டு பதில் சொல்லாம விட்டுடாரு.