Saturday, August 29, 2009

காளமேகப்புலவரின் ககர வரிசைப் பாடல்

தவிர்க்க முடியாத சில காரணங்களால் சிறிய இடைவேளை ஏற்பட்டதற்கு முதலில் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சக வலைப்பூ நண்பர் கில்ஸ் அவர்கள் விரும்பிக்கேட்ட ககர வரிசையில் காளமேகப்புலவர் பாடிய பாடலையே நாங்கள் இன்று பயணிகளுக்குப் பதிவாக வெளியிட இருக்கின்றோம். (ககர வரிசை என்றால் தமிழில் உள்ள க, கா.... வரிசை என்று பயணிகள் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறோம்)

பாடல்:

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!


விளக்கம்:

இப்பாடலைப் பாடலில் உள்ள சீர்ப்படி படித்தால் கடினமாக இருக்கும். ஆகவே இங்கு நாங்கள் பயணிகளுக்காகப் பாடலை சீர் பிரித்து கொடுத்துள்ளோம்.

காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை
கோக்கு கூ காக்கைக்கு கொக்கு ஒக்க - கைக்கைக்கு
காக்கைக்கு கைக்கு ஐக்கு ஆகா !


பாடலை இவ்வாறு சீர் பிரித்துப் பாடலாம். காக்கைக்கு ஆகா கூகை என்பது, இரவில் கூகைக்கு (கோட்டான் அல்லது ஆந்தை) கண் நன்றாகத் தெரியும். ஆனால் காகத்திற்கு இரவில் கண் தெரியாது. ஆகவே இரவில் ஆந்தையும் காகமும் சண்டையிட்டால் ஆந்தையே வெல்லும்.

கூகைக்கு ஆகா காக்கை என்பது காகத்திற்கு பகலில் கண் தெரியும். ஆனால் கூகைக்கு (கோட்டான் அல்லது ஆந்தை) பகலில் கண் தெரியாது. அகவே பகலில் காக்கையும் ஆந்தையும் சண்டையிட்டால் காகமே வெல்லும். .

கோக்கு கூ காக்கைக்கு என்பது, கோ என்றால் மன்னன். அதேபோல் கூ என்றால் உலகம். இங்கு காக்கை என்பது காத்தல் (பாதுகாத்தல்) என்று பொருள். கொக்கு ஒக்க என்பது, கொக்கு என்றால் பறவையினத்தில் ஒன்றான கொக்கைக் குறிக்கும். அதாவது கொக்கு ஒக்க என்றால் "கொக்கைப் போல்" என்று பொருள். அதாவது "ஒரு மன்னனுக்கு அவன் நாட்டைக் காப்பதற்கு கொக்கு தனக்குத் தேவையான உணவு வரும்வரைக் காத்திருப்பது போல் காத்திருக்கவேண்டும்" என்பது இந்த அடியின் பொருள்.

கைக்கைக்கு என்றால் "பகையை எதிர்த்து" என்று பொருள். காக்கைக்கு என்பது காத்தல் (பாதுகாத்தல்) என்று பொருள். கைக்கு ஐக்கு ஆகா என்றால் திறமைமிக்க மன்னனுக்குக் கூட கைக்கு எட்டாமல் போய்விடும் என்று பொருள்.

அதாவது ஒரு மன்னனுக்கு அவன் நாட்டைக் காப்பதற்குக் கொக்கு தனக்குத் தேவையான உணவு வரும்வரைக் காத்திருப்பது போல் காத்திருக்கவேண்டும். இல்லையெனில் பகையை எதிர்த்து நாட்டைக் காத்தல் என்பது திறமைமிக்க மன்னனுக்குக் கூட கைக்கு எட்டாமல் போய்விடும் என்பதே இரண்டு மற்றும் மூன்றாவது அடியின் பொருள்.

இவ்வாறு பல சிறப்புகள் கொண்ட பல்சுவைப் பாடல்களைப் படுவதில் வல்லவரான காளமேகப்புலவர் இன்னும் சிறந்த பாடல்களெல்லாம் பாடியுள்ளார். அவைகளையும் இனிவரும் பதிவுகளில் பார்ப்போம்.

பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய மறவாதீர்.

Wednesday, August 12, 2009

கலைஞானியின் பொன்விழா

12-08-1959 இல் 'அம்மாவும் நீயே அப்பாவும் 'நீயே என்று சின்னஞ்சிறு பாலகனாக 'களத்தூர் கண்ணம்மா' வில் தொடங்கியப் பயணம் பத்து அவதாரங்கள் எடுத்த பின்பும் இன்னும் இடையறாது ஓடிக் கொண்டிருக்கின்றது.



இன்றோடு பத்மஸ்ரீ கமல்ஹாசன் திரையுலகில் காலடி எடுத்து வைத்து ஐம்பதாண்டுகள். வேறு எந்த நடிகருக்கும் எளிதில் கிடைத்துவிட முடியாத சிறப்பு இது.




முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசியவிருது. பின்பு இன்னும் மூன்று தேசியவிருதுகள். ஐந்து மொழிகளில் நடித்த சிறப்பு, மேலும் பல்வேறு சாதனைகள். நடன இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என நிறைய முகங்கள். கடந்த முப்பதாண்டு கால தமிழ் சினிமா வளர்ச்சியின் எந்த காலகட்டத்திலும் தவிர்க்க முடியாத ஒரு பெயர் கமல்ஹாசன். எவ்வளவு புகழப்படுகின்றாரோ அவ்வளவு விமர்சனங்களையும் சந்திக்கத் தவறியதில்லை.


இவரின் தனிப்பட்ட வாழ்க்கை சரியில்லை, மேலும் இவர் படத்தில் முத்தக்காட்சி அதிகம் இருக்கும், இவரின் பல படங்கள் வேற்று மொழிப்படங்களின் தாக்கத்தினால் எடுக்கப்பட்டவை என நிறைய குற்றச்சாட்டுகள். மன்னிக்கவும் இவரைப்பற்றி விமர்சிக்கவல்ல இந்தப்பதிவு. மேலும் இது கமலிற்கு துதிபாடும் நோக்கிலும் எழுதப்பட்டதல்ல.

ஐம்பது ஆண்டுகள் கடந்தும் சளைக்காமல் தமிழ் சினிமாவின் புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாயகனுக்கு செலுத்துப்படும் ஒரு சிறு மரியாதை.

Saturday, August 8, 2009

காளமேகப்புலவரின் யானைப் பொரியல் மற்றும் குதிரைப் பச்சடி......

ஒருவர் காளமேகப்புலவரிடம் கரி என்று தொடங்கி உமி என்று முடியுமாறு ஒரு பாடல் பாடுமாறு கேட்டிருக்கிறார். அதற்க்குப் புலவர், ஒருவன் அவனுடைய அத்தை மகளின் சமையலின் சிறப்பைப் பாடலில் கூறுவது போல் ஒரு பாடலைப் பாடினார். அவர் பாடிய அப்பாடலையே இங்கு இன்று பயணிகளுக்காகப் பதிவாக வெளியிடுகின்றோம்.


பாடல்:
கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கம்உள்ள
அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்
உப்புக் காண் சீச்சி உமி.

விளக்கம்:
கரி என்றால் யானை. அதாவது அப்பெண் யானையைப் பொரியல் செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். யானைப் பொரியலா? அது எப்படி என்று பயணிகள் யோசிப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதாவது கரி என்றால் யானை; அதேபோல் யானைக்கு அத்தி என்று வேறுஒரு பெயரும் உண்டு. இங்கு அத்திக்காய்ப் பொரியல் என்பதையே கரிக்காய்ப் பொரியல் என்று புலவர் கூறியிருக்கிறார்.

கன்னி என்றால் திருமணம் ஆகாதப் பெண். அப்படியென்றால் பெண்ணையா வறுவல் (தீய்த்தல் என்றால் வாணலியில் இட்டு வறுத்தல் என்று அர்த்தம்) செய்தாள்?. கன்னி என்றால் வாழைக்காய் என்று மற்றும் ஒரு பொருள் உள்ளது. அதாவது வாழைக்காய் வறுவல் என்பதையே கன்னிக்காயைத் தீய்த்தாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியிருக்கிறார்.

பரி என்றால் குதிரை. குதிரையை அப்பெண் பச்சடி செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். உண்மையில் அப்பெண் குதிரையைப் பச்சடி செய்தாளா?. இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை இலாவகமாகக் கையாண்டுள்ளார். பரி என்றால் மா என்று இன்னும் ஒரு பொருள் உண்டு. அதாவது மாங்காய்ப் பச்சடி செய்தாள் என்று கூறுவதற்குப் பதில் பரிக்காய்ப் பச்சடி பண்ணாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியுள்ளார்.

அப்பைக்காய் என்றால் அழகிய கத்தரிக்காய் என்று அர்த்தம். அதாவது கத்தரிக்காய் நெய் துவட்டல் செய்திருந்தாள் என்பதையே அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள்(சமைத்தாள்) என்று புலவர் கூறியிருக்கிறார். எதற்க்காக உருக்கம்உள்ள என்ற வார்த்தையைப் புலவர் பயன்படுத்தியிருக்கிறார் என்றால், கிராமப்புறங்களில் கத்தரிக்காயை நெய்வடியும் (உருக்கமுள்ள) காய் என்று கூறுவார்கள்.

இவ்வாறு அத்தைமகள் சமைத்த உணவில், உப்பு அதிகமாக உள்ளதாகவும் (உப்புகாண் சீச்சி உமி) ஆகவே சீச்சி என்று கூறி உமிழ்ந்ததாகவும் புலவர் பாடலை நகைச்சுவையுடன் முடித்துள்ளார்.

பயணிகளுக்குப் பதிவு பிடிக்கும் என்று நம்புகின்றோம். பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும்.

குறிப்பு:
கில்ஸ் அவர்கள் விரும்பிக் கேட்ட காக்கைக்கா காகூகை............ பாடல் அடுத்தப் பதிவில் கட்டாயம் இடம்பெறும் என்பதையும் இங்கு கூறிக்கொள்கின்றோம்.

Thursday, August 6, 2009

சுவர்க்கத்தின் குழந்தைகள்








உலக சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படம்.



குழந்தைகளின் உலகம் தான் எவ்வளவு வித்யாசமானது. அன்பு ஒன்று மட்டுமே அதில் நிறைந்திருக்கும். வெளியே நிலவும் வன்மம், வெறுப்பு, கோபம், வன்முறை முதலியனவற்றுக்கு அங்கு இடமில்லை. நாம் சந்திக்கும் சங்கடங்கள் அவர்களுக்குத் தெரியாது.அதுபோல குழந்தைகளின் சந்தோஷங்கள் நமக்குப் புரிவதில்லை. ஒரு ஊதிய உயர்வு, ஒரு வெளிநாட்டுப் பயணம், நண்பர்களுடன் ஒரு சினிமா, பிடித்த பெண்ணுடன் ஊர் சுற்றுதல், இவை தரும் சந்தோஷங்கள் நம்மால் உணர முடியும். ஆனால் இந்த சந்தோஷங்கள் அனைத்தும் ஒரு சிறு மிட்டாய் அவர்களுக்குத் தந்துவிடும்.எவ்வளவுதான் அவர்களுக்குள் சண்டைகள் இருந்தாலும் அவை வன்முறையில் முடிவதில்லை. அவர்களை சமாதானப்படுத்த ஒரு சிறு விளையாட்டுப் பொருள் போதும்.மொத்தத்தில் அவர்கள் நம்முடனேயே வாழ்ந்து வந்தாலும் அவர்களின் உலகை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. அப்படிப்பட்ட குழந்தைகளின் உலகத்தை, அவர்களின் சண்டையை, பாசத்தை நாமும் ஒரு குழந்தையாக நின்று பார்த்து, புரிந்துகொள்ள உதவி செய்யும் முயற்சி தான் இந்தப்படம்.





அலி,சாரா இருவரும் அண்ணன் தங்கை (இருவரும் சிறியவர்கள் தான்). இவர்களுக்கு ஒரு தம்பி (சின்னஞ்சிறிய குழந்தை), அப்பாவிற்கோ பெரிய உத்தியோகமில்லை. குடும்பம் சற்று வறுமையான குடும்பம்தான். சாராவின் கிழிந்த ஷூவை தைத்து வங்கி வரும் அலி, ஒரு காய்கறிக் கடையில் நுழையும்போது அந்த ஷூ உள்ள பையை ஓரமாக வைத்துவிட்டு கடையில் உள்ளே செல்கின்றான். அப்போது அங்கு வரும் குப்பை அள்ளும் ஒருவன், அந்த ஷூ பையையும் எடுத்துச்சென்று விடுகின்றான். ஷூ தொலைந்த விஷயத்தை சாராவிடம் சொல்லி, தான் அதை எப்படியாவது கண்டுபிடித்துத் தருவதாகவும், அதனால் இந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றான். மேலும் அதுவரை சாரா பள்ளிக்குத் தன்னுடைய ஷூவையே போட்டுச்செல்லுமாறு சொல்கின்றான். அந்த ஊரில் ஆண்களுக்கு மதியம் பள்ளி மற்றும் பெண்களுக்குக் காலையில் பள்ளி. அதனால் தினமும் சாரா தன் அண்ணனின் ஷூ வை போட்டுகொண்டு சென்று, பின் பள்ளி முடிந்தபின் வேகவேகமாக ஓடிவந்து அண்ணனிடம் தருகின்றாள். இருவரின் பள்ளிகளுக்கும் தூரம் அதிகம். எனவே சாரா ஓடிவந்து தருவதற்கு நேரமாகிவிடும். இதனால் அலி பள்ளிக்குத் தினமும் தாமதமாக சென்று ஆசிரியரிடம் திட்டு வாங்குகிறான். இதற்கிடையில் சாரா தன்னுடைய ஷூ வை தான் படிக்கும் பள்ளியிலேயே ஒரு சிறுமி போட்டிருப்பதைக் காண்கின்றாள். அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளின் வீட்டை அடையாளம் கண்டுகொள்கின்றாள். அவளிடமிருந்து எப்படியாவது தன்னுடைய ஷூ வை வாங்கிவிடவேண்டுமென்று சாரா, அலியை அழைத்துக்கொண்டு செல்கின்றாள் . ஆனால் அந்த சிறிமியும் தங்களைப் போல் ஏழையெனத் தெரிந்து பின் வந்து விடுகின்றனர். பிற்பாடு சாரா ஒரு நாள் மறந்துவிட்டு போனப் பேனாவை அந்த சிறுமி சாராவிடம் தருகின்றாள். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர்.




இதனிடையே அலி படிக்கும் பள்ளியில் ஒரு அறிவிப்பைக் காண்கின்றான். அது அந்த ஊரில் நடக்கப்போகும் பள்ளி மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம் பற்றிய அறிவிப்பு. அந்த போட்டியில் மூன்றாவது பரிசு ஷூ என்று அறிவிக்கபட்டுள்ளதைப் பார்த்து, தன் தங்கைக்கு எப்படியாவது அந்த ஷூவை பெற்றுத் தரவேண்டுமென்று நினைக்கின்றான். அதில் கலந்து கொள்ள நினைத்து ஆசிரியரைப் பார்க்க செல்லும்போது, அவரோ அதற்கான காலம் முடிந்து விட்டது என்று மறுத்து விடுகின்றார். அலி அவரை ஒருவாறு சமாளித்துத் தன் பெயரையும் சேர்த்துக் கொள்ள வைக்கின்றான். தன் தங்கையிடம் இதைச் சொல்லி தான் எப்பிடியும் அந்தப்பந்தயத்தில் மூன்றாவதாக வந்து, அந்த ஷூவை வாங்கிவிடுவேன் என்று சொல்கின்றான். போட்டி நடக்கும் நாள் வந்தது.அலி எப்போதும் போல் தன் பழைய ஷூவை அணிந்து செல்கின்றான். போட்டியில் அலி, மூன்றாவது இடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போது இன்னொரு சிறுவன் அலியை கீழே விழச் செய்து விடுகின்றான். மீண்டும் எழுந்து மூன்றாவது இடத்தில் வருவதற்காக வேகமாக ஓடும் அலி, எதிர்பாராமல் முதலாவதாக வருகின்றான். அதற்காக அலிக்கு ஒரு கோப்பையும், பதக்கமும் அளிக்கப் படுகின்றது. அனைவரும் சந்தோசமாக இருக்கும்போது அலி மட்டும் தான் மூன்றாவதாக வர முடியாமல் போனதை நினைத்து அழுகின்றான்.



அலி ஏமாற்றத்துடன் வருவதைக் கவனிக்கும் சாரா சோகத்துடன் வேறு வேளையைப் பார்க்க உள்ளே செல்கின்றாள். வீட்டிற்கு வரும் அலி தன் ஷூவை கழற்றுகின்றான், அந்த ஷூ முற்றிலுமாக கிழிந்த நிலையில் இருக்கின்றது. அவனது கால்கள் கொப்பளித்து காணப்படுகின்றன. வலியைப் பொருத்துக்கொண்டு தன் கால்களைத் தண்ணீர்த்தொட்டியில் வைக்கின்றான். அங்கிருக்கும் சிறு மீன்கள் அவன் கால்களின் காயங்களை மொய்க்கின்ற நிலையில் இதயம் வருடும் இசையுடன் படம் நிறைவடைகின்றது.

1997இல் வெளிவந்த இந்த ஈரானிய மொழித் திரைப்படத்தை இயக்கியவர் மஜித் மஜிடி. எளிமையான திரைக்கதை, இயல்பான காட்சியமைப்பு, இவைதான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம்.

அந்த சிறிய வீட்டில் ஷூ தொலைந்த விஷயத்தைப் பற்றி எவ்வாறு தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் பேச முடியும். இந்த இடத்தில் இயக்குனர், அலியும் சாரவும் தங்கள் நோட்டுப் புத்தகத்தில் எழுதி இருவரும் ஷூ தொலைந்த விஷயத்தைப் பற்றி பேசுமாறு செய்கின்ற காட்சி கவிதை.அலி எவ்வளவு எடுத்து சொல்லியும் சாரா கேட்காமல் அப்பாவிடம் இந்த விஷயத்தை சொல்லபோகின்றேன் என்று அடம்பிடிக்கும்போது, அலி தன் புத்தம்புது பென்சிலை சாராவிடம் தந்தவுடன் அவள் அமைதியாகும் காட்சி, நம் குழந்தைப் பருவத்தைக் கண்டிப்பாக நினைவூட்டும்.

அலியின் ஷூ வை அணிந்து செல்லும் சாரா, தனக்குப் பெரிதாக இருக்கும் அந்த ஷூவைப் பார்த்து, யாரும் கிண்டல் செய்வார்கள் என்று எண்ணி, தன்னை விட உயரமான சிறிமியின் பின்னே மறைந்து கொண்டு தன் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி அருமை.

அது போல தன் ஷூவை போட்டிருக்கும் சிறுமியின் வீட்டிற்கு விறைப்புடன் செல்லும் அலியும் சாரவும், அந்த சிறுமியின் தந்தை ஒரு குருடர் என்றும், அவர்களும் ஏழை என்று அறிந்தவுடன் ஒருவருக்கொருவர் பார்வையாலேயே பேசிக்கொள்ளும் காட்சியும் அற்புதம்.

அதுபோல ஓட்டப்பந்தயத்தில் கண்ணை மூடிக்கொண்டு வேகமாக ஓடி வந்து எல்லைக்கோட்டைத் தொடும் அலியைத் தூக்கி நிறுத்தும் ஆசிரியரிடம், தான் மூன்றாவதாக வந்துவிட்டேனா என்று கேட்கும் அலியிடம், நீ தான் முதலாவதாக வந்திருகின்றாய் என்று ஆசிரியர் சொல்லும்போது, அலி உடனே கண் கலங்கும் காட்சி அற்புதம். வெற்றிபெற்று பதக்கத்தை வாங்கச் செல்லும்போது அலி, அந்த மூன்றாவது பரிசாக வழங்கப்போகும் ஷூவை பார்த்தவாரே ஏமாற்றத்துடன் செல்லும்காட்சியும் அற்புதம்.

படத்தின் இறுதியில் ஒரு காட்சியில் அலி பந்தயத்தில் வென்று விட்டு வீட்டிற்கு வரும்போது, அவர்களின் அப்பா இருவருக்கும் புதிய ஷூ வாங்கி தன் சைக்கிளில் வீட்டிற்கு வருவதாக ஒரு காட்சி வரும்.

இந்த திரைப்படம் நாம் அனைவரும் காண வேண்டிய ஒன்று. சமத்துவம், சகோதரத்துவம், என்று சொல்லிக்கொண்டு திரியும் நாம், அதற்கான அர்த்தம் தெரிய வேண்டுமென்றால் அதைக் குழந்தைகளிடம்தான் காணமுடியும் என்று நமக்கு உணர்த்தும் படம்.

வெளியான எல்லா நாட்டிலும் மக்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்தப்படம், ஆஸ்கார் விருதிற்கு, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

Sunday, August 2, 2009

காளமேகப்புலவர் பெண்ணிடம் போட்டப் புதிர்.........

ஒரு முறை ஒரு பெண் கவி காளமேகப்புலவரிடம் இதுவரை எங்கும் கேட்டிராத ஒரு பாடலைப் பாடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரும் அப்பெண் விழி விரித்து ஆச்சர்யப்படும் அளவுக்குப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கின்றார்.

அப்படியென்ன பாடலைப் பாடிவிட்டார் என்ற சந்தேகம் பயணிகளுக்கு வரலாம். அப்பாடலைப் பற்றியே இந்த பதிவில் பேசப் போகின்றோம்.


பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே; மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!

விளக்கம்:

பூநக்கி என்றால் என்ன என்ற கேள்வி அனைவருக்கும் வருவதில் சந்தேகமில்லை. நாம் அனைவருக்கும் தெரிந்தது பூனை. புலவர் பூனையைக் குறிப்பிடுகிறார் என்றால் அதற்கு இரண்டு கால் தானே என்று யூகிக்கத் தோன்றும். இங்கு தான் புலவர் தன் சொல் நயத்தை மேன்மையாகக் கையாண்டுள்ளார். இங்கு பூநக்கி என்பது பூவை நக்கித் தேனை உறிஞ்சும் தேனீ . அதாவது தேனீக்களுக்கு ஆறுகால் என்பதை அவ்வாறு கூறியிருக்கிறார்.

புள்இனம் என்றால் பறவையினங்கள். அது சரி பறவைகளுக்கு எப்படி ஒன்பது கால். இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை பயன்படுத்தியுள்ளார். அதாவது 9 * 1/4 = 2 1/4. ஒன்பதைக் காலால் பெருக்கினால் இரண்டே கால் வரும். அதாவது பறவை இனங்களுக்கு இரண்டே கால்கள் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

இங்கு யானையை ஆனை என்று கூறியுள்ளார். மேலே கூறியது போல் 17 * 1/4 = 4 1/4. பதினேழை காலால் பெருக்கினால் நாலேகால். அதாவது ஆனைக்கு நான்கு கால்கள் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.


பின்பு அப்பெண்ணைப் பார்த்து, பெண்ணே கேள்(மானே! கேள்!). முண்டகம் என்பது தாமரை மலர். அதாவது தாமரை மலரின் செம்மை நிறத்தை உடையவர் சிவபெருமான். அதே போல் குவளை மலரின் நீல நிறத்தை உடையவர் அன்னை உமையாள். தாமரை மலரின் செம்மை நிறத்தை உடைய சிவபெருமான் தன்னில் சரிபாதியை குவளை மலரின் நீல நிறத்தை உடைய அன்னை உமையாளுக்குக் கொடுத்தது தாமரைப்பூவில் குவளை மலரின் நீல நிறம் படிந்துள்ளது (பூத்ததுண்டு) என்றும். இக்காட்சியைக் காண முடியும் என்றும். அதற்க்கான சான்றுகள் ஏட்டிலோ அல்லது நாட்டிலோ கிடையாது என்றும் கூறியுள்ளார். அதாவது இக்காட்சியை கண்ணால் மட்டுமே காண முடியும். இதற்கான சான்றை எங்கும் கேட்க்க முடியாது என்று பாடலை முடித்துள்ளார்.

பதிவு பிடித்திருந்தால் கருத்துகளைப் பதிவு செய்யவும். கருத்துகள் வரவேற்க்கப் படுகின்றன. இதே போல் உங்களுக்கும் ஏதாவது பாடல் தெரிந்திருந்தால் கருத்துக்களுடன் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் . எங்கள் பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யவும்.