Wednesday, November 25, 2009

காளமேகப்புலவரின் மறுமொழி..........


இரண்டு மாதங்களாக பதிவுகள் ஏதும் வெளியிடாமல் இருந்ததற்கு பயணிகளிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம்.

காளமேகப்புலவர் குடந்தையில் ஒரு வைணவ குலத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் வரதன். திருவானைக்கா கோவில் மோகனாங்கியின் மீது கொண்ட காதலால் சைவ குலத்திற்கு மாறி அவளையே மணந்து திருவானைக்கா கோவிலில் இருவரும் திருப்பணி செய்து வந்தனர்.

இவ்வாறு வைணவ குலத்திலிருந்து சைவ குலத்துக்கு மாறிய நம் புலவரிடம் திருவரங்கத்தில் வசிக்கும் வைணவர் ஒருவர், திருமால் உலகத்தை உண்டபொழுது உங்கள் சிவபெருமான் அந்த உலகத்தில் எங்கே இருந்தார் என்று நக்கலாக ஒரு வினாவை வினவினார். அந்த வினாவிற்கு காளமேகப் புலவர் ஒரு பாடலின் மூலம் பதில் உரைத்தார். அந்தப் பாடலையே நாம் இன்று பயணிகளுக்காக பதிவாக வெளியிடுகின்றோம்.

பாடல்:

அருந்தினான் அண்டம்எலாம் அன்றுமால் ஈசன்
இருந்தபடி ஏதுஎன்று இயம்பப் - பொருந்திப்
பருங்கவளம் யானைகொளப் பாகன்அதன் மீதே
இருந்தபடி ஈசன்இருந் தான்.


விளக்கம்:

உலகத்தை (அண்டம்) திருமால் உண்ட பொழுது சிவன் அந்த உலகத்தில் இருந்த இடத்தைப் கூறு என்று கேட்டால், யானை சோற்று உருண்டையை உண்ணும் பொழுது யானையின் பாகன் அதன் மீது ஏறி அமர்ந்திருந்தது போல் சிவன் திருமாலின் மீது அமர்ந்திருந்தார். என நக்கலாக வினா எழுப்பிய திருவரங்கத்து வைணவனுக்கு நக்கலாகவே பாடல் மூலம் பதில் அளித்தார்.

இவ்வாறெல்லாம் யோசிக்கும் சக்தியை காளமேகப்புலவருக்கு மட்டும் கடவுள் கொடுத்தாரோ என்னவோ! அதே போல் நினைத்த இடத்தில் கூறவேண்டிய அனைத்தையும் எதுகை மோனையுடன் வெண்பாவில் அமைப்பது நம் காளமேகப் புலவருக்கு கைவந்த கலையாகவே இருந்திருக்கின்றது.

இதே போல் இன்னுமொரு பாடலுடன் உங்களை சந்திக்கின்றோம். பாடல் பிடித்திருந்தால் பயணிகள் பின்னூட்டம் இட மறக்கவேண்டாம்.