Wednesday, November 25, 2009

காளமேகப்புலவரின் மறுமொழி..........


இரண்டு மாதங்களாக பதிவுகள் ஏதும் வெளியிடாமல் இருந்ததற்கு பயணிகளிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம்.

காளமேகப்புலவர் குடந்தையில் ஒரு வைணவ குலத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் வரதன். திருவானைக்கா கோவில் மோகனாங்கியின் மீது கொண்ட காதலால் சைவ குலத்திற்கு மாறி அவளையே மணந்து திருவானைக்கா கோவிலில் இருவரும் திருப்பணி செய்து வந்தனர்.

இவ்வாறு வைணவ குலத்திலிருந்து சைவ குலத்துக்கு மாறிய நம் புலவரிடம் திருவரங்கத்தில் வசிக்கும் வைணவர் ஒருவர், திருமால் உலகத்தை உண்டபொழுது உங்கள் சிவபெருமான் அந்த உலகத்தில் எங்கே இருந்தார் என்று நக்கலாக ஒரு வினாவை வினவினார். அந்த வினாவிற்கு காளமேகப் புலவர் ஒரு பாடலின் மூலம் பதில் உரைத்தார். அந்தப் பாடலையே நாம் இன்று பயணிகளுக்காக பதிவாக வெளியிடுகின்றோம்.

பாடல்:

அருந்தினான் அண்டம்எலாம் அன்றுமால் ஈசன்
இருந்தபடி ஏதுஎன்று இயம்பப் - பொருந்திப்
பருங்கவளம் யானைகொளப் பாகன்அதன் மீதே
இருந்தபடி ஈசன்இருந் தான்.


விளக்கம்:

உலகத்தை (அண்டம்) திருமால் உண்ட பொழுது சிவன் அந்த உலகத்தில் இருந்த இடத்தைப் கூறு என்று கேட்டால், யானை சோற்று உருண்டையை உண்ணும் பொழுது யானையின் பாகன் அதன் மீது ஏறி அமர்ந்திருந்தது போல் சிவன் திருமாலின் மீது அமர்ந்திருந்தார். என நக்கலாக வினா எழுப்பிய திருவரங்கத்து வைணவனுக்கு நக்கலாகவே பாடல் மூலம் பதில் அளித்தார்.

இவ்வாறெல்லாம் யோசிக்கும் சக்தியை காளமேகப்புலவருக்கு மட்டும் கடவுள் கொடுத்தாரோ என்னவோ! அதே போல் நினைத்த இடத்தில் கூறவேண்டிய அனைத்தையும் எதுகை மோனையுடன் வெண்பாவில் அமைப்பது நம் காளமேகப் புலவருக்கு கைவந்த கலையாகவே இருந்திருக்கின்றது.

இதே போல் இன்னுமொரு பாடலுடன் உங்களை சந்திக்கின்றோம். பாடல் பிடித்திருந்தால் பயணிகள் பின்னூட்டம் இட மறக்கவேண்டாம்.

7 comments:

  1. காஞ்சிக் கல்வெட்டில் உள்ளபடி பார்த்தால் காளமேகம் விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரத்தைச் சேர்ந்தவர்.

    முனைவர் இரா.நாகசாமி, கல்வெட்டில் காளமேகம் என்ற கட்டுரையில் கொடுத்துள்ள காஞ்சிக் கல்வெட்டு:

    மண்ணில் இருவர் மணவாளர் மண்ணைந்த
    கண்ண நவனிவந்தபேர் காளமுகில் - கண்ண
    னவனுக்கூ ரெண்ணி லணியரங்க மொன்றே
    இவனுக்கூ ரெண்ணா யிரம்.

    ReplyDelete
  2. @தமிழநம்பி....

    நீங்கள் காட்டியுள்ள மேற்கோளில் நீங்கள் கூறுவது போல் இருந்தாலும், அவர் குடந்தையில் பிறந்து திருவரங்கத்து மடப்பள்ளியில் சமையல் செய்பவராக இருந்தார் என்று நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

    சில சான்றுகள்........

    link1
    link2

    ReplyDelete
  3. இந்த காளமேகப்புலவர் தானே இரட்டுற மொழிதல் செய்யுள்கள் எல்லாம் எழுதி இருக்கார்?
    சுவையான தகவல். நன்றி.

    ReplyDelete
  4. @Ananya Mahadevan

    Welocme to our Blog..........!!

    ReplyDelete
  5. காளமேகம் கவிதை கண்டு மனம் மகிழ்ச்சி கொண்டது. இதுவரை கேள்விப் படாத பாடல். நன்றி

    ReplyDelete
  6. ஐயா பாடல்கள் மிகவும் நன்றாக இருந்கின்றன ..இந்த புத்ஹகம் எல்லாம் எங்கே கிடைக்கும் என்று சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  7. சிலேடை புலவர் காளமேக பாடல்கள் கேட்டு சிறு வயதில் நானும் முயற்சி செய்து எழுதிய பாடல்கள் தவறு இருப்பின் பொறுத்து அருள்க :

    வாசல் கட்டுறும், வளர்த்தோர்

    காணாது விடின் வாடும் -குலை

    குலைக்கும் சீவல மங்கை -தென்

    கலை நாட்டில் நாயாகும வாழை மரம் .



    இரவுகண் விழிக்கும், சந்திரன் கண்டலரும்,

    மென் சிறகடித்து சிலிர்க்கும் சீவல மங்கை

    தென்கலை நாட்டில் ஆந்தையும் அல்லியாகும்

    ReplyDelete