Saturday, July 25, 2009

தெளிவு!

சற்றே பெரிய சிறுகதை!
சுவர்க்கடிகாரம் இரவு பத்து மணியைக் காட்டியது. அழுது வீங்கிய கண்களுடன் இருந்த நித்யா டிவியை நிறுத்திவிட்டு தன் அறையிலிருந்து வீட்டின் முகப்பறைக்கு வந்தாள். நவீன் இன்னும் வரவில்லை.

சரி இப்பொது இவர்களைப் பற்றி சிறு அறிமுகம்!

நித்யாவைப் பார்ப்பவர் எவரும் அவளுக்கு இருபத்தைந்து வயதுதான் இருக்குமென்று சரியாக கணித்து விடுவர். எவரையும் சீக்கிரம் வசியம் செய்துவிடும் அழகு, ஒல்லியான தேகம். கல்யாணமாகி ஒரு வருடம் கூட இன்னும் முடியவில்லை. அதற்குள் அவளுக்கும் நவீனிற்கும் தினமும் எதாவது ஒரு விஷயத்தில் மனம் ஒத்துபோகாமல் அடிக்கடி சண்டை தான். அவளுக்கு வாழ்கையின் மீதே ஒரு வெறுப்பு வந்துவிட்டதை நவீனும் கவனிக்காமலில்லை.

நவீன் ஒரு பெரிய கம்பெனியில் சாப்ட்வேர் துறையில் மேனேஜர். பொறுப்புகள் அதிகமான வேலை. சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வர முடியாது. சில சமயம் வார விடுமுறை நாட்களில் எங்காவது நித்யாவுடன் வெளியில் செல்லும்போது அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து உடனடியாக வரச் சொல்வார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் இவனும் செல்லவேண்டியதாகிவிடும். சென்று மீண்டும் வீட்டிற்கு வந்தால் இருவருக்கும் மறுபடி பிரச்சனை தான். அதுபோல் நித்யாவும் சில நேரம் விடுமுறை நாட்களில் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கும். அன்றைக்கு மட்டும்தான் என்றில்லை, விடுமுறை நாட்களில் இருவரும் ஒன்றாக இருந்தாலும், எதாவது ஒரு சிறு விஷயத்திற்காக பேச ஆரம்பித்து அது மீண்டும் சண்டையில் தான் வந்து முடியும்.இத்தனைக்கும் இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள்தான். ஒரே கம்பெனியில் தான் வேலை செய்தார்கள். நவீனின் பணியைப் பற்றி முழுதும் தெரிந்தும், இவன் தான் தன் துணையாக வேண்டுமென்று நித்யா, விரும்பி ஏற்றுக்கொண்டாள். கல்யாணத்திற்குப்பின் வேறு கம்பெனியில் இன்னும் அதிக சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தாள்.

இவ்வளவு அறிமுகம் போதும்.மீண்டும் கதைக்கு வருவோம்.

இன்னும் நவீன் வரவில்லை. எங்கு சென்றிருப்பான் என்று யோசித்தாள். ஒருவேளை அந்த கீதாவை அவள் வீட்டில் இறக்கிவிட்டு அங்கேயே சாப்பிடுகின்றானோ. நித்யா, திருமணம் என்னும் பெரிய குழிக்குள் தெரிந்தே விழுந்து விட்டதாக நினைத்து அழுதாள். சற்று உணர்ச்சிவசப்பட்டவளாய், 'கடவுளே! எனக்கு எதாவது ஒரு வழி சொல்லன்!' என்று புலம்பினாள். தீடீரென்று ஒரு வெளிச்சம். இப்பொது நித்யாவின் எதிரே ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். சாந்தமான முகம், வெண்மையான உடை, உதட்டில் சிறு புன்னகை, பார்ப்பதற்கு டிவி நாடகத்தில் வரும் சாமியார் போலிருந்தார். நித்யா சற்று பயந்தாலும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரிடம் பேச ஆரம்பித்தாள்.

'நீங்க யாரு? எப்படி வந்தீங்க?'

'நீதானம்மா என்னை அழைத்தாய்.'

'நானா?'

'ஆம். கடவுளே என்றாயே!'

'அப்டினா நீங்க கடவுளா?'

'பாக்க வித்தியாசமா இருக்கீங்க? டிரஸ் கூட வேற மாதிரியிருக்கு. நீங்க எந்த சாமி? அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி, நீங்க உண்மையா சாமி தானா?'

'பரவாயில்லை. சற்று முன் அழுதாலும் உன் கேள்விகள் அனைத்தும் தெளிவாகத் தான் உள்ளன. எனக்கு இது தான் உருவம். உங்கள் பூஜை அறையில் தொங்கும் படங்கள் எல்லாம் நீங்கள் உருவாக்கியக் கற்பனைப் பாத்திரங்கள் தான். உனக்காக எதுவும் சித்து வேலைகள் செய்து காட்ட முடியாது. என்னால் உங்களைப் படைக்க தான் முடியும். மற்றபடி, பாட்ஷா படத்தில் ரஜினி சொல்வதுபோல் வாழ்வது எல்லாம் உங்கள் கையில் தான் உள்ளது, இன்னும் நீ என்னை நம்பவில்லை என்றால் அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது. எதோ என்னை அழைத்தாயே என்று வந்தேன்.வேண்டாமென்றால் சென்று விடுகிறேன்'

'மன்னிச்சிடுங்க. என் கஷ்டத்த நினச்சு தான் உங்ககிட்ட புலம்பினன்'

'என்ன கஷ்டம்?'

'வாழவே பிடிக்கல'

'திருமணம் ஆகிவிட்டதா?'

'ஒரு வருஷம் முடியப் போகுது'

'அதற்குள், உனக்கு வாழ்க்கை அலுத்து விட்டதா? அல்லது உன் கணவனைப் பிடிக்கவில்லையா?'

'நவீனைப் பிடிக்கவில்லை'

'நவீன்?'

'என் கணவன், காதலனாக இருந்து கணவனாக மாறியவன்.'

'உங்களுக்குள் என்ன பிரச்சனை?'

'அவனுக்கு எப்போதும் வேலைதான் முக்கியம். அதிகம் சம்பாதிக்க வேண்டும்.எனக்காக நேரம் செலவு செய்ய அவனுக்கு மனமில்லை. நானும் தான் வேலைக்கு போறன். ஆனா சீக்கிரம் வரல?'

'ஒருவேளை அவனுக்கு வேலைப்பளு அதிகமோ?'

'அப்டில்லாம் கிடையாது. பணம் தான் முக்கியம் அவனுக்கு. நான் வேலைக்கு போகக் கூடாதாம். வீட்ல இருந்து அவன் அப்பா அம்மாவ நல்லாப் பார்த்துக்கணும். என் பழைய பிரென்ட் கூட போன் பேசக்கூடாது. இப்படி நிறைய கண்டிஷன் போடறான்'

'இப்போதுதான் இப்படி நடந்து கொள்கிறானா?'

'புரியல'

'காதலிக்கும்போது அவன் இவ்வாறுதான் இருந்தானா?

'ஆமா'

'அப்போது உனக்கு இதெல்லாம் தெரியவில்லையா?'

'இல்ல. ஆனா இப்பதான் தெரியுது'

'எத்தனை வருடம் காதலித்தீர்கள்?'

'ஒரு வருடம் தான்'

'அப்படியென்றால் நீ அவனை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. நீ அவனிடம் உன் எதிர்பார்ப்புகளை எடுத்துக்கூறி புரியவைக்கலாம் அல்லவா?'

'அதுக்கு இப்ப நேரமில்ல. எல்லாம் கடந்து போயாச்சு.'

'சரி. என்னதான் செய்வதை உத்தேசம்?'

'விவாகரத்து!'

'அவன் இதற்கு ஒப்புக்கொள்வானா?'

'அதப்பத்தி எனக்கு கவலை இல்ல. அவனும் கூட இப்ப என்னபத்தி பெருசா நினைக்கிறது இல்ல'

'தவறு செய்கின்றாய் மகளே! காதலிக்கும் போது ஒருவரின் நிறைகள் மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் வாழும்போது தான் ஒரு சிறு குறை கூட பெரிதாய்த் தெரியும். இப்பொது நீ தெளிவாகயில்லை அதனால் உன்னால் சரியான முடிவெடுக்க முடியாது. உனக்கு தேவை சில காலம் அமைதி.நவீனை விட்டு சிறிது காலம் பிரிந்திரு. அப்போது தான் உனக்கு அவன் தேவை உனக்கு வேண்டுமா வேண்டாமா என்று தெரியும். உனக்காக நான் நவீனிடமும் பேசுகிறேன். அதற்கு பின் இருவரும் சேர்ந்து ஒரு நல்ல முடிவெடுங்கள்!'

'சரி'

'இன்னும் சில நாட்கள் கழித்து உன்னைப் பார்கிறேன்.அதற்குள் நீ ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கவேண்டும்'

'சரி'

'நான் போய்வருகிறேன். மீண்டும் சந்திப்போம்'

கடவுள் நேரே நவீனின் அலுவலகத்திற்கு சென்றார். அவன் கிளம்பத் தயாராக இருந்தான். தான் நித்யாவின் சொந்தம் என்று அறிமுகம் செய்துகொண்டு அவனிடம் பேசினார். அவனுக்கு குழப்பமாக இருந்தது. இருந்தாலும் அவனும் அவரை அழைத்துக் கொண்டு ஒரு உணவகத்திற்கு சென்றான். கடவுள் சாப்பிட மறுத்துவிட்டார். அவன் மட்டும் சாப்பிட ஆரம்பித்து, அப்பிடியே அவரிடம் பேச்சு கொடுத்தான்.

'உங்கள நான் இப்பதான் மீட் பண்றன் சார். நித்யா கூட உங்கள பத்தி எதுவும் சொல்லல'

'அவளுக்கு இன்றைக்கு தான் என் நினைப்பு வந்தது. என்னை அழைத்தாள். அதனால் அவளை சந்திதேன். சிறிது நேரம் பேசிவிட்டு அப்படியே உங்களைப் பார்க்கலாமென்று வந்தேன். உங்களுக்குள் எதோ பிரச்சனை இருப்பதுபோல் தெரிகின்றது. சரி உங்களை சந்தித்துப் பேசலாமென்று வந்தேன்'

'எல்லாத்தையும் சொன்னாளா?'

'ஆம்'

'என்ன பத்தி தான் தப்பா சொல்லிருப்பா. அவ நல்லவ மாதிரி பேசிருப்பாளே'

'அப்படியில்லை, உங்களை நினைத்து வருந்தினாள்'

'சார், நானும் அவளும் லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணோம்'

'தெரியும்'

'அப்ப கூட லீவ் நாள்னாதான் நாங்க மீட் பண்ண முடியும். நானும் அவளுக்காக அப்ப எந்த கமிட்மென்ட்டும் வச்சிக்கமாட்டன். நல்லா தான் இருந்தோம். இப்ப ஏன் இப்படி நடந்துக்கிரானு தெரியல?. அடிக்கடி ஆபிஸ் போன் பண்ணி என்னபத்தி விசாரிக்கறா.எதாவது ஒரு பொண்ணுகூட பேசினாலும் சந்தேகப்படறா'

'நீங்களும் அவளை எந்த பழைய நண்பர்கள் கூடவும் பேசக்கூடாது என்று சொன்னதாக என்னிடம் கூறினாள்'

'அவ இப்ப அவங்க கூட பேசறதப்பாத்தா எனக்கு முன்ன மாதிரி தெரியல சார்.'

'அப்படியென்றால் உங்களுக்கும் அவள்மேல் சந்தேகம்?'

'ஆமா, அவ இப்பதான் இப்படி மாறிட்டா'

'தவறு உங்களிடமும் உள்ளது. நீங்கள் இவ்வாறு இருந்தால் இதற்கு என்னதான் முடிவு?'

'தெரியல சார்.அவ கூட இப்ப காலம் தள்ள முடியாதுன்னு தெரியுது'

'அப்படியெனில் நீங்களும் விவாகரத்து...'

'ஆமா சார்.அதான் நானும் சொல்ல வந்தன்'

'சரி. உங்களிடமும் நான் அவளுக்கு செய்த உபதேசம் தான் சொல்ல வேண்டியுள்ளது. நீங்கள் இருவரும் சிறிது காலம் தனித்து வாழ்ந்து பின்பு ஒரு முடிவெடுக்கலாமே?'

'அதுக்கு தான் விவாகரத்து !'

'அது நிரந்தரப் பிரிவு. நான் சொல்வது தற்காலிகம் தான். இந்த சிறிது காலப்பிரிவு இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும்.'

'சரி'

'நான் புறப்படுகிறேன்'

'சார் நான் வேணும்னா எங்கயாவது ட்ரோப் பண்ணட்டுமா?'

'நன்றி. நான் பார்த்துக்கொள்கிறேன், இன்னும் சில நாள் கழித்து உங்கள் இருவரையும் சந்திக்கறேன். அப்போது பார்க்கலாம்.வருகிறேன்'

நாட்கள் உருண்டோடின. ஒரு வருடம் முடிந்தது. கடவுள் மீண்டும் வந்தார் நித்யாவைப் பார்க்க. அவள் தன் தாய்வீட்டுற்கு சென்றிருந்தாள்.

'என்ன மகளே, நலமா?'

'வாங்க, உங்கள ரொம்ப நாளா காணோம்னு பார்த்தன்'

'வேறு வேளை இருந்தது. இப்பொது தான் உன் நினைப்பு வந்தது. உடனே உன்னை நாடி வந்தேன். என்ன முடிவெடுத்துள்ளாய்?'

'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கணேஷ் கொஞ்சம் வாங்க'

அவள் குரலுக்கு ஒருவன் 'வரேன்' என்று சொல்லிகொண்டே அவர்கள் இருவரை நோக்கி வந்தான். அவனை நித்யா கடவுளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

'இவர் தான் கணேஷ். கணேஷ் இவர் எங்க தூரத்து சொந்தம். நான் கல்யாணம் பண்ணிக்க போறவர். நான் நீங்க என்ன வந்து பார்த்த அடுத்த நாளே நவீன விட்டு வந்துட்டன். இங்க வேற வேலைல ஜாய்ன் பண்ணன். அங்க தான் கணேஷ் கூட பழக்கம். என்ன பத்தி இவர்கிட்ட எல்லாத்தையும் சொன்னன். இவரும் என்ன புரிஞ்சு என்ன காதலிக்க ஆரம்பிச்சாரு. நானும் சம்மதம் சொல்லிட்டன். நாளைக்கு எங்களுக்கு கல்யாணம்'

கணேஷ் கடவுளைப் பார்த்து 'ஹலோ சார்' என்றான். கடவுள் பதிலுக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு ஏறக்குறைய மயக்கம் வந்தவர் போல அங்கிருந்து உடனே கிளம்பினார். என்ன தான் நடக்கின்றது என்று புரியாதவராய் நேரே நவீனைத் தேடிச் சென்றார்.

நவீனின் அலுவலகம் சென்ற போது அவன் வேறொரு பெண்ணுடன் தன் காரில் ஏறப் போனான். கடவுளைக் கண்டதும் 'ஹலோ சார்' என்றான்.

'நவீன் நலமா?'

'பைன் சார். நீங்க எப்படி இவளவு தூரம்?'

'உங்களை சந்திப்பதற்கு தான்'

'நித்யா?'

'தெரியும். பார்த்தேன். அவள் இவ்வளவு சீக்கிரம் இப்படி முடிவு எடுப்பாள் என்று நினைக்கவில்லை'

'அதெல்லாம் நான் மறந்தாச்சு சார். இவ பேரு கீதா, என் கூடதான் வேளை செய்றா. என்ன பத்தி எல்லாம் தெரியும். நாங்க ரெண்டு பெரும் இப்ப காதலிக்கறோம். சீக்கிரம் கல்யாணம். ஒரு நிமிஷம் சார்..' என்று சொன்னவன் கீதாவை அவருக்கு அறிமுகம் செய்தான்.

'சரி நான் போகின்றேன் நவீன்' என்று அங்கிருந்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நடந்தார்.

இனி யார் புலம்பினாலும் அதைக் கேட்கக் கூடாது என்றும், முக்கியமாக யார் வாழ்க்கையிலும் தலையிடக் கூடாது என்றும் தெளிவான முடிவிற்கு வந்தவராய் நேரே 'டாஸ்மாக்' என்று பெயர்ப்பலகை தொங்கும் கடையை நோக்கிச் சென்றார்.

இதுவரை அவர் யார் புலம்பலுக்கும் செவி கொடுப்பதில்லை.


5 comments:

  1. Rombavae kushtam dhaan :-P

    Sari.. Appo sarakkadikka aarambichu innuma andha tasmac-la sarakku theerama irukku? akshaya paathiram maadiri edhum irukko anga :-P

    ReplyDelete
  2. hahahaha.... அறை எண் 305ல் கடவுள் கதை மாதிரி இருந்தாலு, நல்லா இருந்துச்சு!:) டாஸ்மார்க் முடிவு சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்!! நானும் அவரை அங்க போய் மீட் பண்ணி ஆறுதல் சொல்றேன்.

    ReplyDelete
  3. @தமிழ்

    நீங்க ஆறுதல் சொன்னாலும் அவரு கேட்கிற நிலமையில இருக்கமாட்டாரு!

    ReplyDelete
  4. @g3
    //Rombavae kushtam dhaan//

    படிச்ச உங்களுக்கே இப்படினா அப்ப அவருக்கு எப்படி இருந்திருக்கும்

    ReplyDelete
  5. what ur bus size is getting longer day by day ....

    ReplyDelete