Saturday, September 26, 2009

காளமேகப் புலவரின் கடைமொழி மாற்றுப் பாடல்........

பயணிகளுக்கு விஜயதசமி வாழ்த்துக்கள்!

சென்ற வாரம் எங்களுடைய வலை இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் எங்களால் பயணிகளுக்கு எந்தப் பதிவையும் வெளியிட இயலவில்லை. அதற்க்காகப் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்து இந்தவாரப் பதிவை உங்களுக்காக வெளியிடுகின்றோம்.

இந்தப் பதிவில் பயணிகளுக்காக காளமேகப் புலவரின் கடைமொழி மாற்றுப் பாடல்களில் ஒன்றைத்தான் வெளியிட இருக்கின்றோம். அதென்ன கடைமொழி மாற்றுப் பாடல்!. ஐயம் புரிகின்றது. ஆனால் அதைக் கூறிவிட்டால் பாடலின் சுவை குறைத்துவிடும். ஆகவே அதைப்பற்றி பாடலின் முடிவில் பார்ப்போம்.

பாடல்:

கொன்றை மலர்தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்றுகுழல் ஊதினான் நீள்சடையன் - பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்
சிக்கலிலே வாழும் சிவன்.


விளக்கம்:

கொன்றை என்பது ஒரு வகை மலர். இது சிவபெருமானின் திருவடையாள மலர். இது சிவபெருமானுக்கே உரிய மலராகும். இம்மலருக்கு "சொர்ண புஷ்பம்" என்ற ஒரு பெயரும் உண்டு. அவ்வாறு பெருமையடைய மலரை கோபாலன் (திருமால்) அணிதிருந்தார்(தரித்தான்) என்று புலவர் கூறியுள்ளார்.

கோல் என்றால் மரக்கிளையில் உள்ள குச்சி. அதாவது மூங்கில் மரக்கிளையில் உள்ளகுச்சியை எடுத்து சிவபெருமான் (நீள்சடையன்) புல்லாங்குழல் ஊதினார் என்றும் புலவர் கூறுகின்றார். அதெப்படி கண்ணன் தானே குழல் ஊதுவார் என்ற கேள்வி நம் பயணிகளுக்கு வருவது எங்களுக்குப் புரிகின்றது.

அக்கு என்றால் ருத்திராட்சம். அதாவது பொன் போன்ற ருத்திராட்சத்தை திருமால் (மாயன்) அணிந்திருந்தார் என்றும் புலவர் கூறுகின்றார். இங்கும் சிவன்தானே ருத்திராட்சம் அணிவார் என்று பயணிகளுக்கு சந்தேகம் வருவது புரிகின்றது.

சிக்கல் என்பது நாகைப் பட்டினத்திற்கு அருகில் உள்ள ஒரு சிவதலம். இங்கு சிங்காரவேலரும் மிகப் பிரபலம். வசிட்டர் சிவபெருமானை தரிசித்த தலம். அவ்வாறு பெருமையுடைய சிக்கலிலே வாழும் சிவன் பாம்பினாலான மெத்தையிலே (அரவுஅணை) கண் மூடி உறங்கினார் என்றும் புலவர் கூறுகின்றார். இங்கும் திருமால் தானே பாற்கடலிலே ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார் என்று பயணிகள் மனதில் நினைப்பது புரிகின்றது. ஆனால் புலவர் அவ்வாறுதானே பாடியிருக்கின்றார்.

இங்குதான் நமது புலவர் கடைமொழி மாற்றை இலாவகமாகக் கையாண்டுள்ளார். இப்பொழுது கடைமொழி மாற்று என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஒரு பாடலின் முடிவில் உள்ள கடைசி சீரையோ அல்லது கடைசி அடியையோ முதலாவதாக மாற்றிப் படித்து பொருள் காணவேண்டிய பாடல்களை கடை மொழி மாற்றுப் பாடல் என்று வகை பிரித்துள்ளனர் நமது முன்னோர்.

இப்பாடலில் கடைசி அடியை பாடலின் முதல் அடியாக மாற்றிப் பாடினால் பாடல்களின் பொருள் சரியாக விளங்கும்.

சிக்கலிலே வாழும் சிவன்
கொன்றை மலர்தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்றுகுழல் ஊதினான் நீள்சடையன் - பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்

பாடலை மேலுள்ளவாறு படித்தால், சிக்கலில் இருக்கும் சிவபெருமான் கொன்றை மலர் மாலையைத் தன் மார்பில் அணிந்திருந்தார் என்றும் , கண்ணன் (கோபாலன்) புல்லாங்குழல் கொண்டு நின்று ஊதினார் என்றும், நீண்ட சடை உடைய சிவபெருமான் ருத்திராட்சம் அணிந்திருந்தார் என்றும், திருமால் (மாயன்) பாற்க்கடலில் ஆதிசேஷன்(அரவுஅணை ) மீது துயில் கொண்டிருந்தார் என்று பொருள் படும்படி பாடல் அமையும்.

இப்பொழுது பயணிகளுக்கு கடைமொழி மாற்று என்றால் என்னவென்று புரிந்திருக்குமென்று நாங்கள் முழுமையாக நம்புகின்றோம். இவ்வாறெல்லாம் பாடல் பாடுவதில் நமது புலவருக்கு நிகர் நமது புலவர் தான்.

பாடல் பிடித்திருந்தால் கருத்துக்களை வெளியிடவும்.

4 comments:

  1. lovely... :) ithu puthusa iruku...chaancela

    ReplyDelete
  2. ஆஹா... அற்புதம்.நான் நினைக்கிறேன் இவர் எப்போவுமே பெட்டியிலிருந்து வெளியில் தான் சிந்திப்பார்.
    அதாங்க, think out of the box

    ReplyDelete
  3. அற்புதமான விளக்கம். மேலும் பல பாடல்கள் தருக

    ReplyDelete